ஜீ வி பிரகாஷ்குமார் நடிப்பில் மு. மாறன் இயக்கியுள்ள ‘பிளாக்மெயில்’ திரைப்படம் செப்டம்பர் 12, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
நிகழ்வில் பேசிய இயக்குநர் மு. மாறன், “தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பு மகத்தானது. இவரைப் போல ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது கஷ்டம். இந்தப் படம் வெற்றியடைந்து அவர் அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க வேண்டும். இதுபோன்ற ஒரு இக்கட்டான சூழலில் தனஞ்செயன் சார் மாதிரியான ஒருத்தர் கைக்கொடுத்தது பெரிய விஷயம். சரியான படங்களையும் திறமையாளர்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவார். அவர் எங்கள் படத்திற்கு கொடுத்த ஆதரவிற்கு நன்றி. படக்குழுவினர் அனைவரின் ஒத்துழைப்பிற்கும் நன்றி. ஜிவி பிரகாஷ் சாருடன் அடுத்தடுத்து படங்கள் செய்ய வேண்டும் என எனக்கும் ஆசை இருக்கிறது. உங்கள் அனைவரின் ஆதரவும் தேவை” என்றார்.
நடிகர் ஜீ வி பிரகாஷ், “படக்குழுவினர் அனைவரும் சின்சியராக வேலை பார்த்துள்ளார்கள். நல்ல படத்தை மாறன் கொடுத்துள்ளார். படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களை கட்டிப்போடும் த்ரில்லராக படம் இருக்கும். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபகரமானதாக அமைய வேண்டும். எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்த தனஞ்செயன் சாருக்கும் நன்றி. ரமேஷ் சார், முத்துக்குமார் சார், தேஜூ, லிங்கா மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.
தயாரிப்பாளர், விநியோகஸ்தகர் தனஞ்செயன், “சில காரணங்களால் இந்தப் படம் தள்ளிப்போனது. பின்பு நான் படம் பார்த்தபோது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் இருக்கும். இயக்குநர் மாறனுக்கு வாழ்த்துக்கள். படம் பார்த்து முடித்ததும் நல்ல படம் பார்த்த திருப்தி கிடைக்கும். எப்படி பிளாக்மெயில் செய்கிறார்கள், எப்படி கடத்துகிறார்கள் என பல லேயர்களில் கதை செல்லும். லிங்கா, பிந்து மாதவி, தேஜூ, ரமேஷ் திலக், முத்துக்குமார் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். யதார்த்தமாக நமது வாழ்வில் நடக்கும் விஷயங்களை வைத்து நல்ல த்ரில்லர் படம் கொடுத்துள்ளார் மாறன். அமல்ராஜ் சாருக்கு 12ஆம் தேதி நல்ல வெற்றி கிடைக்கும். உங்களுக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன். மாறன் பொறுப்புணர்ச்சியோடு ஒரு படம் கொடுத்திருக்கிறார். சினிமா சுற்றி பல நெகட்டிவான விஷயங்கள் நடந்து வருகிறது. நல்ல படங்கள் வரும்போது அதை கெடுக்க வேண்டும் என பல விஷயங்கள் செய்கிறார்கள். அதை எல்லாம் தாண்டிதான் ஒரு படம் ஜெயிக்க வேண்டியதாக இருக்கிறது. அதனால், சினிமாவை மிஸ்யூஸ் செய்யாதீர்கள். நல்ல சினிமாவிற்கு எப்போதும் ஆதரவு கொடுங்கள். இது எனது தனிப்பட்ட கருத்துதான். இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷை நெருங்குவது கடினம். ஆனால், நடிகராக அவரை அணுகுவது எளிது. சம்பளமே வாங்காமல் கூட நடிப்பார். ஏனெனில், நடிப்பது அவருக்கு பிடிக்கும். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் ஜிவி பிரகாஷ். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியாக மாற வேண்டும்” என்றார்.

