நடிகர் மோகன்லால் முதன்முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘பரோஸ்.’
பரோஸ் எனும் பூதத்திற்கும், ஒரு பெண் குழந்தைக்கும் உள்ள உறவை ஃபேன்டஸியாக அனைவரும் ரசிக்கும் வகையில், 3 டியில், பிரமாண்ட படைப்பாக உருவாக்கியிருக்கிறார்,
இந்த படம் வரும் டிசம்பர் 25-ம் தேதி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடந்தது.
நிகழ்வில் பேசிய மோகன்லால், 47 வருடமாக திரைத்துறையில் இருக்கிறேன். இயக்குநராக என் முதல் படம். எப்படி இது நடந்தது? என எல்லோரும் கேட்டார்கள், இது அதுவாகவே நடந்தது, அவ்வளவு தான்.
இது ஒரு ஃபேண்டஸி, அட்வென்சர் படம். முழுக்க 3டியில், இரண்டு கண்களில் பார்ப்பது போல, இரண்டு கேமராவை வைத்து, படம்பிடித்துள்ளோம். அதை எடிட் செய்து நீங்கள் பார்க்கும் போது, புது அனுபவமாக இருக்கும். இப்படத்தில் மிக முக்கியமான திறமையான கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர். உலகின் சிறந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் இப்படத்தில் பணியாற்றியுள்ளார். ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார். மிகச்சிறந்த கலைஞர்கள் பணியாற்றியுள்ளனர்.
2 நடிகர்கள் தான் இந்தியா, மற்றவர்கள் எல்லோரும் போர்ச்சுகல், ஸ்பெயின், க்ரீஸ், ரஷ்யா என நிறைய நடிகர்கள் நடித்துள்ளனர். பிரிட்டிஷ் குழந்தை தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.
படத்தின் கதைப்படி ஒரு இன்னொசன்ஸான இளமையான இசை வேண்டும் என்பதால் தான், லிடியனை அழைத்தேன். அவரும் மிகச்சிறப்பான இசையைத் தந்துள்ளார். இப்படத்தில் பெரும் துணையாக இருந்த ராஜிவ் குமாருக்கு நன்றி. இப்போது கூட வேலை நடந்து வருகிறது. படத்தில் ஒரு அனிமேடட் கேரக்டர் வருகிறது. இங்குள்ள ஒருவரை நடிக்க வைத்து, அதைத் தாய்லாந்து கலைஞர்கள் வைத்து, அனிமேடட் கேரக்டராக மாற்றியுள்ளோம். மிகப்பெரிய உழைப்பு.
பாலா, அவரும் மிகப்பெரிய உழைப்பைத் தந்துள்ளார். நன்றி. ஒரு மேஜிக் உலகிற்கு இப்படம் உங்களை அழைத்துச் செல்லும். உங்களுக்குள் இருக்கும் குழந்தை மனதை, இப்படம் எழுப்பி விடும். அனைவரும் ரசிப்பீர்கள். இப்படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி. இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
இசையமைப்பாளர் லிடியன் நாதஸ்வரம், பரோஸ் என்னுடைய அறிமுகத் திரைப்படம், இது மோகன்லால் சாரின் முதல் படைப்பு. அவர் இயக்கும் முதல் படத்தில் நான் இசையமைப்பாளராக அறிமுகமாவது மகிழ்ச்சி. பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் மார்க் கிலியான், ‘பரோஸ்’ படத்திற்கு ரீ-ரிக்கார்டிங் செய்துள்ளார் வாழ்த்துகள். 2019ல் அமெரிக்காவில் ஒரு போட்டியில் வெற்றிபெற்று வந்த பிறகு, முதல் ஆளாக மோகன்லால் சார் தான் வாழ்த்தினார். பின்னர் இந்தப்படம் பற்றிச் சொல்லி, இசையமைக்க வேண்டும் என்றார். மிகப்பெரிய சந்தோசம். கோவிட் வந்தது, அந்த தடைகளைத் தாண்டி, இப்போது படம் வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் நானும் நிறைய இசை கற்றுக்கொண்டுள்ளேன். எனக்கு முழு ஆதரவாக இருந்த மோகன்லால் சாருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றியுள்ள இசைக் கலைஞர்கள், பாடகர்கள் அனைவருக்கும் நன்றி. கண்டிப்பாக இப்படம் உங்களை ஆச்சரியப்படுத்தும்” என்றார்.
நிகழ்வில் வசனகர்த்தா ஆர் பி பாலா, கிரியேடிவ் ஹெட் ராஜீவ் குமார் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

