திரைப்பட இயக்குநராக இருந்து நடிகராக மாறிய பாலாஜி சக்திவேல், பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் கதாநாயகனாக நடித்துள்ளார்!
இயக்குநராக இருந்து நடிகராக மாறியவர்களில், சிறப்பான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து திறமையான நடிகராக தன்னை நிலைநிறுத்தியவர்களில் பாலாஜி சக்திவேலும் ஒருவர். உணர்ச்சி ஆழமும் யதார்த்தமும் கொண்ட கதாபாத்திரங்களை தொடர்ந்து தேர்வு செய்து வரும் அவர், தனது திறமையான நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். ‘டிஎன்ஏ’ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம், ‘காந்தி கண்ணாடி’ படத்தில் மனதைத் தொடும் நடிப்பு, அதனைத் தொடர்ந்து ‘வாரண்ட்’ இணையத் தொடரில் முக்கியமான தோற்றம் ஆகியவற்றின் மூலம், தரமான நடிகராக தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார் பாலாஜி சக்திவேல். இந்த கலைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் வகையில், தற்போது அவர் 12 நிமிட பைலட் திரைப்படமான ‘ஆஃப் தி ரெக்கார்ட்’டில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் தீவிரமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலாஜி சக்திவேல், ருக்மணி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க, கொட்டாச்சி, ஆறு பாலா, பிரதீப் மற்றும் மீசை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஏ.ஆர். முத்துராமன் எழுதி இயக்கியுள்ள ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ ஒரு காவல்துறை அதிகாரி மற்றும் ஒரு சாதாரண மனிதர் இடையே உருவாகும் உணர்வுப்பூர்வமான மோதல், பதட்டம் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை மையமாகக் கொண்டுள்ளது. 12 நிமிடங்களைக் கொண்ட இந்த பைலட் திரைப்படம் யதார்த்தமும் உணர்ச்சிப்பூர்வமான அனுபவத்தையும் பார்வையாளர்களுக்கு தர இருக்கிறது.
பல ஆண்டுகளாக குறும்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் முயற்சிகள் மூலம் தனது கலைத்திறனை மேம்படுத்தி வந்த முத்துராமன், தனது தீவிரமான சினிமா ஆர்வத்தை இந்த பைலட் படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் ஃபிக்ஷன் ஸ்டுடியோ வாயிலாக கதை சொல்லும் கனவுகளை தொடர்ந்து வளர்த்து வரும் அவர், ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ திரைப்படத்தை தனது சினிமா பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக உருவாக்கியுள்ளார்.

