இந்த வாரம் வெளியானவற்றில் ‘அனுக்கிரகன்’, ‘பறந்து போ’ என இரண்டு படங்கள் அப்பா _ மகன் பாசப்பிணைப்பை மையமாக கொண்டவை. ‘பறந்து போ’வில் வருகிற அப்பா, மகன் ஆசைப்படுவதை செய்கிறார். அனுக்கிரகனில் வருகிற மகன், தன் அப்பா ஆசைப்பட்டதையெல்லாம் செய்கிறான்…
அப்பா ஆசைப்பட்டதை மகன் செய்கிறான் என்றதும், ‘மகன் டாக்டராக வேண்டும்; கலெக்டராக வேண்டும் என்பதுபோல் அந்த அப்பா ஏதாவது ஆசைப்பட்டிருப்பார். அதை மகன் நிறைவேற்றுகிறான் போலிருக்கிறது’ என்ற முடிவுக்கு வருவீர்கள். ஆனால், இந்த கதை அப்படி வழக்கமான பாதையில் பயணிக்கவில்லை என்பதுதான் படத்தின் சிறப்பம்சம்.
தன் அப்பாவுக்கு சிறுவயதில் நல்ல உணவு கிடைத்ததில்லை; வேலைக்கு செல்லும் வயதில் நல்ல வேலை கிடைக்கவில்லை, ஆசைப்பட்ட பெண்ணுடன் கல்யாணம் என்பதும் சாத்தியமாகவில்லை. அப்படி அப்பாவுக்கு எதெல்லாம் கிடைக்கவில்லையோ அதையெல்லாம் பெற்றுத்தர வேண்டும், எதையெல்லாம் இழந்தாரோ அதெல்லாம் கிடைக்க வேண்டும்’ என்று நினைக்கிறான் மகன். அது கடவுளின் அனுக்கிரகத்தால் சாத்தியமாகிறதா, அறிவியல் துணையோடு நிறைவேறுகிறதா என்பது படத்தின் மீதிக்கதை. இயக்கம் சுந்தர் கிரிஷ்
கிட்டத்தட்ட அப்பாவின் வயதில் அவருக்கு நண்பனாக இருக்கிற மகனாக ஆமாம், அந்த கேரக்டர் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.
தொழிலதிபராக வருகிற முரளி ராதாகிருஷ்ணன், தன் நண்பன் இசையமைப்பாளராக வேண்டும் என விரும்புவதும், நினைத்தபடியே நடந்ததும் சந்தோஷப்படுவதுமாக தன் பங்களிப்பை எளிமையாக தந்திருக்கிறார். இதில், முரளியின் நண்பன்தான் முரளியின் அப்பா என்பது கதையிலிருக்கிற சுவாரஸ்யம். அவர் செய்யும் தியாகம்தான் கதையின் ஹைலைட்.
அப்பாவாக வருகிற விஜய் கிருஷ்ணா, நினைத்தது கிடைக்காத வருத்தத்தையும் கிடைக்கிறபோது உருவாகும் மகிழ்ச்சியையும் பொருத்தமான முகபாவங்களில் கொண்டு வந்திருக்கிறார்.
விஜய் கிருஷ்ணாவுக்கு மனைவியாக வருகிற ஸ்ருதி ராமகிருஷ்ணன் மாடர்ன் உடையில் தேவதையாய் தெரிகிறார்; புடவை கட்டி வரும்போது அலங்கரித்த சிலைபோல் ஜொலிக்கிறார். நடிப்பாலும் கவர்கிறார்.
கதையின் நாயகனைக் காதலிப்பது, அவர் நண்பனின் நினைப்பிலேயே இருப்பதைக் கண்டு எரிச்சலடைவது என நடிப்பால் கவனிக்க வைக்கிறார் இளமையாக அழகாக கண்களில் கவர்ச்சி காட்டுகிற தீப்ஷிகா.
இளவயது மகனாக வருகிற குழந்தை நட்சத்திரம் ராகவனின் இயல்பான துடிப்பான நடிப்பு படத்தின் பலம்.
மற்ற கதாபாத்திரங்களில் வருகிறவர்கள் கதைக்குத் தேவையானதை செய்திருக்கிறார்கள்.
கதையோடு கலந்திருக்கும் பாடல்களுக்கு உயிரோட்டமான இசையைத தந்திருக்கும் ரேஹான் பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவில் எளிமையும் தரமும் இணைந்திருக்கிறது.
லாஜிக் பற்றி விரிவாக யோசித்து திரைக்கதை அமைத்திருக்கலாம் என்பதிலிருந்து படத்தின் உருவாக்கத்தில் சில குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதையெல்லாம் பொருட்படுத்தாவிட்டால் சயின்ஸ் பிக்ஷன் போல் நகரும் கதை ஒரு கட்டத்தில் பெருமாள் கருடாழ்வார் என பக்தியின் பக்கம் சாய்வது ஆச்சரியம் தரும். வித்தியாசமான படம் பார்த்த திருப்தி தரும்.

