புதிய கதை, கதைக்கேற்ற நடிகர் நடிகைகள், பொருத்தமான கதை நிகழ்விடங்கள் என பார்த்துப் பார்த்து உருவாக்கப்பட்டு, இந்த வருடத்தில் வெளியான தரமான படங்களின் பட்டியலில் அமர்கிறது ‘அலங்கு.’
கேரளாவில் இருக்கிற அந்த ஊரின் தலைவர், தனது அல்லக்கைகளிடம் ஊரிலுள்ள நாய்களில் ஒன்றைக்கூட விட்டுவைக்காமல் கொல்லச் சொல்கிறார். அவர்களின் பிடியில் தமிழ்நாட்டு மலை கிராம இளைஞன் தர்மன் வளர்த்து வரும் நாய் சிக்குகிறது.
தர்மன் தன் நண்பர்களோடு சென்று அவர்களிடம் தன் நாயை விட்டுவிடச் சொல்கிறான். அவர்கள் சம்மதிக்காத நிலையில் தர்மன் கோபப்பட, அவர்கள் தர்மனையும் அவனது நண்பர்களையும் கொலைவெறியோடு தாக்க அந்த இடம் கலவர பூமியாகிறது. தர்மனின் கைக்கு அரிவாள் ஒன்று கிடைக்க பெரும் சம்பவம் நடந்து முடிகிறது.
இப்போது தர்மனும் அவனது நண்பர்களும் அவர்களிடமிருந்து தப்பித்தாக வேண்டும். நாயையும் காப்பாற்ற வேண்டும். ஆனால், தலைவரின் ஆட்கள் எல்லா பக்கமும் சுற்றி வளைக்கும் சூழ்நிலையில் எதற்குமே வாய்ப்பில்லை என்றாகிவிடுகிறது.
நாயைக் கொல்லும் விவகாரம் பெரிதாகி, மனிதர்களுக்குள் அடிதடி வெட்டுக்குத்து ரத்தச்சகதி என விபரீதமாவது இதுவரை தமிழ் சினிமாவில் பார்க்காதது.
அப்படியொரு விபரீதம் ஏன் உருவானது? தலைவர் நாய்களைக் கொல்ல முடிவெடுத்தது ஏன்? தர்மனும் அவனது நாயும் தப்பிக்க முடிந்ததா? என்பதற்கெல்லாம் பதில் சொல்கிறது பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் பாய்ந்தோடும் திரைக்கதை… இயக்கம் எஸ் பி சக்திவேல்
அறிமுக நாயகன் குணாநிதி ஏற்ற பாத்திரத்துக்கு தோற்றத்தால் பொருந்தியிருக்கிறார். பாசம், ரோசம், கொந்தளிப்பு, பரிதவிப்பு என பல்வேறு உணர்வுகளை போதுமான அளவுகளில் வெளிப்படுத்தியிருக்கிறார்.
நாயகனுக்கு அம்மாவாக வருகிற ஸ்ரீரேகாவின் இறுமாப்பான பார்வையும் வெடிகுண்டு வீசுவதில் காட்டும் வேகமும் கெத்தாக இருக்கிறது.
கொலை வெறியர்களிடமிருந்து தன் அக்காவின் மகனையும் அவனது நண்பர்களையும் பாதுகாக்க எடுத்துக் கொள்ளும் முயற்சியில் காளி வெங்கட்டின் தேர்ந்த நடிப்பை பார்க்க முடிகிறது.
ஊர்த் தலைவராக, தன் மகளை நாய் கடித்த ஆத்திரத்தில் குற்றச் செயல்களை கட்டவிழ்த்து விடுகிற செம்பன் வினோத்தின் ஆளுமை, அவரது அடியாளாக திமிர் தெனாவட்டின் மொத்த உருவமாக நிற்கிற சரத் அப்பானி என மற்றவர்களின் நடிப்பும், காளியம்மாள் என்ற பெயரில் கதைநாயகியாக வருகிற நாயின் ஓட்டமும் நடையும் கதையோட்டத்தின் பரபரப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.
காடு, மலை, ஆறு என பசுமைப் பரப்புகளில் பயணிக்கும் காட்சிகள் பாண்டிகுமாரின் ஒளிப்பதிவில் பிரமாண்டமாக பதிவாகியிருக்க, பின்னணி இசையை கதையோட்டத்துக்கு நெருக்கமாக்கியிருக்கிறார் அஜீஷ். கிராபிக்ஸ் காட்சிகளில் நேர்த்தி அதிகம்.
மனிதர்கள் நாய்கள் மீது பாசம் காட்டுவதையும் நாய்கள் மனிதர்களிடம் நன்றியோடிருப்பதையும் பார்த்துப் பழகிய கண்களுக்கு, மனிதர்களால் நாய்கள் சந்திக்கும் கஷ்ட நஷ்டங்களை எடுத்துக் காட்டியிருக்கும் அலங்கு, ரசிகர்களை வித்தியாச அனுபவத்தால் சிறைப்பிடிக்கும் விலங்கு!

