காதலின் உண்மையான அர்த்தத்தை இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் வகையில் உருவாகியிருக்கிறது ‘அன்பு’ குறும்படம்.
வெளிப்புற அழகை மட்டுமே பார்த்து காதலிப்பதை விடுத்து, ஒருவருடைய குணம், ஒழுக்கம் மற்றும் உண்மையான பாசத்தை (மனசை) மட்டுமே அடிப்படையாகக் கொண்டு காதலை அணுக வேண்டும் என்ற அழுத்தமான சமூகக் கருத்தை இப்படம் பேசுகிறது.
இந்த படத்தை சிறப்புத் திரையிடலில் பார்த்த இயக்குநர் ஏ வெங்கடேஷ், “காதலுக்கு லுக் முக்கியமில்லை, ஒருவருடைய கேரக்டர் மற்றும் நிஜமான அன்புதான் முக்கியம் என்பதை மிக நேர்த்தியாக இப்படத்தில் சொல்லியிருக்கிறார்கள். மூன்று படங்களுக்கு என்னிடம் கோ டைரக்டராக பணியாற்றிய பன்னீர் செல்வம் இதன் திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். இந்த குறும்படம் ஒரு முழுநீளத் திரைப்படத்திற்கான சிறந்த முன்னோட்டமாக அமைந்துள்ளது. படக்குழுவினர் மென்மேலும் வளர வாழ்த்துகள்” என்று பாராட்டினார்.
இயக்குனரும் தயாரிப்பாளருமான ட்ரூத் தினேஷ் பேசுகையில், “பசங்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, உண்மையான அன்பை அடையாளங்கண்டு அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. விரைவில் இதை ஒரு முழுநீளத் திரைப்படமாக பெரிய திரைக்குக் கொண்டுவருவதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன” என்றார்.
கதாநாயகி ஸ்வேதா மற்றும் படக்குழுவினர் தங்களது கடின உழைப்பிற்கு ஆதரவு தருமாறு ஊடகங்களுக்கும் ரசிகர்களுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

