சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பானுப்ரியா, கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘அயலான்.’
வேற்று கிரக வாசியை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த ஃபேண்டஸி திரைப்படம் வரும் பொங்கல் விடுமுறையின்போது வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடந்தது. படத்தின் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், தயாரிப்பாளர் ‘கேஜேஆர் ஸ்டூடியோஸ்’ கோட்டபாடி ஜே. ராஜேஷ், நடிகர் கருணாகரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இயக்குநர் மாரி செல்வராஜும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்வில் சிவகார்த்திகேயன் பேசியபோது, “இந்த மேடை நிறைய வகையில் ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ’அயலான்’ வருமா வந்துவிடுமா எப்போ வரும் என்ற கேள்விகள் வந்து கொண்டேயிருந்தது. இதோ பொங்கலுக்கு வருகிறது.
இந்தப் படம் தொடங்கும் முன் பான் இந்தியா இல்லை. இது தமிழ் மக்களுக்காக பண்ணியது. நாம ஆசைப்பட்ட படம் கண்முன் தெரிகிறது. இதில் நாமும் நடித்துள்ளோம் என்பதில் சந்தோஷமாக உள்ளது.
இதில் சரக்கு, புகை பிடித்தல், கிளாமர், போதைப் பொருள் கிடையாது. குழந்தைகளுக்கான விஷயங்கள் இருக்கும். ஏஆர் ரஹ்மானின் வெறித்தனமான ரசிகர்களில் நானும் ஒருவன். என் படத்தில் ரஹ்மான் இசை வருது என்பதை விட எனது வாழ்க்கையில் வேறு என்ன இருக்கு? படத்தை பார்த்து முதலில் சூப்பர் என்று சொன்னவர் ஏஆர். ரஹ்மான். டீசரை விட ட்ரெய்லர் இன்னும் நன்றாக இருக்கும். உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்.
ரஹ்மான் சார் இசையில் நான் பாடல் எழுதியுள்ளேன். அந்த அனுபவம் மிகவும் சுவாரசியமானது. இப்படத்தில் அயலானாக நடித்த வெங்கட் நாயகனாக நடித்துள்ள மதிமாறன் திரைப்படம் வெற்றிபெற வாழ்த்துகள். பாய்ஸ் படத்தில் சித்தார்த் அத்தனை அழகாக இருப்பார். அயலானுக்கு அவர் குரல் கொடுத்தநன்றி. அதற்கு அவர் பணம் வாங்காமல் பண்ணிக் கொடுத்தார்.
இப்படம் நிச்சயம் உங்களை சந்தோஷப்படுத்தும். கஷ்டப்பட்ட எல்லோருக்கும், பணம் கொடுத்து பார்க்கும் அனைவருக்கும் இந்த படம் ஒர்த் என்று தோன்றும். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நான் நடிக்கும் படம் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளோம். ராஜ்குமார் பெரியசாமி படம் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதனை முடித்துக்கொண்டு பக்கா மாஸ் என்டர்டெயின்மென்ட் படம் பண்ண உள்ளேன்” என்றார்.
இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் பேசியபோது, “ படத்தில் அதிகளவில் சிஜி உண்டு என்றதும் பயம் வந்தது. ஆனால், இந்தப் படத்தில் சிஜி நன்றாக இருந்தது. அதற்காக ஐந்து மடங்கு வேலை செய்ய வேண்டி இருந்தது. இயக்குநர் ரவிக்குமார் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வேலை செய்துள்ளார்” என்றார்.
இயக்குநர் ரவிக்குமார், “சிவகார்த்திகேயன் என்னை உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார். படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளளார். ரஹ்மான் சார் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்கிறது. நடிகர், நடிகைகள், மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் என அத்தனை திறமையானவர்கள். அப்படிப்பட்ட கலைஞர்களை வைத்துக் கொண்டு படம் சரியாக எடுக்கவில்லை என்றால் என்மீதுதான் பிழை. அதனால், எல்லா விஷயங்களுமே சிறப்பாக செய்துள்ளோம். விஎஃப்எக்ஸ் வைத்து படம் நிச்சயம் சிறப்பாக எடுப்போம் என்ற நம்பிக்கை இருந்தது. அதை சாத்தியமாக்கியுள்லோம். காட்சிகளை எல்லாம் பாக்கும்போது பெருமையாக இருந்தது” என்றார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியபோது, “இயக்குநர் ரவிக்குமார் ஒரு நேர்மறையான ஆளுமை. ஒரு படத்தை வைத்துக்கொண்டு வலிகளை சுமந்து கொண்டு இருக்கிறார். இந்த ஐந்து வருடத்தில் எந்தவித மாற்றமும் இன்றி இருக்கிறார். உங்க மனசுக்கு நல்லது நடக்கும். திறமையான மனிதர்கள் அமைதியாக இருப்பார்கள். சென்னை வந்தது முதல் நான் பழகிய ஆள் சிவகார்த்திகேயன். இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். நான் பால் போட்டால் சிக்ஸர் தான். இவரால் தான் நான் கிரிக்கெட் விளையாடுவதையே நிறுத்திவிட்டேன். தென் மாவட்டங்களில் பெய்த கனமழைக்கு ரஹ்மான் மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து அரிசி அனுப்பி வைத்தனர். தென்மாவட்ட மக்கள் சார்பாக நன்றி கூறிக் கொள்கிறேன். கலைப்புலி தாணு, ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகியோரும் அனுப்பினர். அவர்கள் இல்லை என்றால் அந்த மக்கள் இவ்வளவு விரைவாக மீண்டு வந்திருக்க மாட்டார்கள். சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க வேண்டும் என்று ஆசை. நிச்சயம் அதற்கு வாய்ப்பு இருக்கு. கண்டிப்பாக அது நடக்கும்” என்றார்.

