சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘அனலி.’ இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை தல, தளபதி இருவரையும் வைத்து மிரட்டல் படங்களைக் கொடுத்த இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டாடா, கராத்தே பாபு படங்களின் இயக்குநர் கணேஷ் கே பாபு ஆகியோர் வெளியிட்டனர்.
இயக்குனர் தினேஷ் தீனா படத்தை பற்றி பேசியபோது, “இந்தப் படத்தின் கதை ஒரே இரவில் நடக்கக் கூடியது. மூன்றாம் உலகப்போர், கடத்தல் மன்னன் லால் சேட்டா, கான் பாய் மற்றும் ரங்கராவ் ரெட்டி இவர்களிடம் மாட்டிக்கொள்ளும் ஜான்சி மற்றும் அவளது பத்து வயது குழந்தை ஆகியவற்றைப் பற்றி பேசுகிறது. காட்டு மிருகங்களை விட மிகவும் மோசமானவன் மனிதன் அதில் மிகவும் முக்கியமானவன் இந்த லால் சேட்டா. ஜான்சி தன் புத்திசாலிதனத்தை பயன்படுத்தி எப்படி இதை முடிவுக்கு கொண்டு வருகிறாள் என்பதை சுவாரஸ்யமாக சொல்லும் படம் தான் இந்த அனலி” என்றார்.
இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக பத்தாயிரம் கண்டெயினர்கள் கொண்ட யார்டில் மிக பிரமாண்டமான செட் அமைத்து படம் பிடிக்க முழு சுதந்திரம் அளித்து படத்தின் தரத்தை சர்வதேச அளவில் உயர்த்தியிருக்கிறார் தயாரிப்பாளர் சிந்தியா லூர்டே.
படத்தில் சைந்தவியின் அழகிய குரலில் ஓர் மழைத்துளியும் என்ற பாடல் மற்றும் அ.பா. ராஜாவின் வரிகளில் வில்லன் பாடல் குஜிலி கும்பா என்ற பாடலும் மிக அருமையாக வந்துள்ளது.
விரைவில் பாடல்கள், டிரெய்லர் வெளியாகவுள்ளது. படமும் மிக விரைவில் வெளியாகவிருக்கிறது.

