மனிதர்கள் வெற்றியை மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்ற மனநிலைக்குள் சிக்குவது எத்தனை ஆபத்தானது என்பதை எடுத்துச் சொல்கிற பரபரப்பான இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
பரபரப்பு தொடங்குகிற இடம் கொடைக்கானல். அங்குள்ள பார்க்’கில் இளைஞன் ஒருவன் அடிவயிற்றைக் கத்தியால் கிழித்துக் கொண்டு இறந்துபோகிறான். தூக்கில் தொங்கலாம், விஷம் குடிக்கலாம், கழுத்தை அறுத்துக் கொள்ளலாம், ஓடும் ரயிலின் குறுக்கே பாயலாம்… இப்படி தற்கொலை செய்துகொள்ள ஏகப்பட்ட வழிமுறைகள் இருக்கிறபோது வயிற்றை அறுத்துக்கொண்டு தற்கொலை என்கிற வழியை அவன் தேர்ந்தெடுக்க என்ன காரணம்? தற்கொலை முடிவு ஏன்? தற்கொலை செய்து கொண்டவன் யார்?
இந்த கேள்விகளுக்கான பதில்களை அலசி ஆராய்ந்து கண்டுபிடிக்கும் பொறுப்பு மெடிக்கல் லீவில் இருக்கிற காவல்துறை அதிகாரி ஷாமிடம் வந்து சேர்கிறது.
விசாரணையில் இறங்கியவ ஷாமுக்கு கொடைக்கானல் பார்க்கில் நடந்ததை ஜெராக்ஸ் எடுத்ததுபோல் வேறு ஊர்களிலும் சில இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட விவரம் கிடைக்கிறது. அதேபோன்ற தற்கொலைகள் தொடரும் என்பதும் தெரியவருகிறது.
இப்படியொரு பதற்றமான சுழலில் கொலைகள் நடப்பதன் பின்னணி என்ன என்பதை கண்டறிந்து, அடுத்தடுத்து தற்கொலைகள் நடக்காமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறார் ஷாம். அவர் எதையெல்லாம் கண்டறிந்தார் என்பதும், தற்கொலைகளை தடுக்க முடிந்ததா இல்லையா என்பதும் கதையின் மீதி…
போலீஸ் அதிகாரிக்கான கம்பீரம் உயரத்திலும் உடற்கட்டிலும் இயல்பாகவே அமைந்திருக்க, விசாரணையின்போது காட்டும் தோரணையின் மூலம் கம்பீரத்தின் சதவிகிதத்தைக் கூட்டியிருக்கிறார் ஷாம். செய்துகொண்டிருக்கும் பணியில் தடை ஏற்பட்டு மனம் உடைகிறபோது பொருத்தமான வேதனையை முகபாவங்களில் கொண்டு வந்திருக்கிறார்.
நாயகி நிரா நாயகன் ஷாமுக்கு உடலளவில் நல்ல மேட்சிங். அவரது லட்சணமான முகத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளின் பிரதிபலிப்பு கச்சிதம்.
துப்பறியும் பணியில் ஷாமின் உதவியாளராக நியமிக்கப்படும் இளைஞர், இரண்டாம் நாயகன் ரேஞ்சுக்கு படம் முழுக்க துடிப்பாக வலம் வருகிறார்.
நடக்கும் தற்கொலைகளுக்கு காரணம் இவர்தான் என யூகித்து மனநல நிபுணர் ஒருவர் சுற்றி வளைக்கப்படுகிறார். அவரும் அவர் இருக்கும் சூழ்நிலையும் அதை நம்ப வைக்கிறது. அதெல்லாம் தவறு என்று சொல்லும்விதமாக அந்த மனிதரிடமுள்ள கத்தி அவரது வயிற்றை பதம்பார்க்கிறது. அப்படி அதிரவைக்கும் காட்சிகளில் தேர்ந்த நடிப்பைத் தந்திருப்பவர் நிழல்கள் ரவி.
தோல்விகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் சைக்கோ மனநிலைக்கு ஆளான, கதையின் முக்கியமான பாத்திரத்தில் விதேஷ் தந்திருக்கும் வில்லத்தனம் மிரள வைக்கிறது.
விசாரணைக்கு வரும் ஷாமிடம், நடக்கிற தற்கொலைகளுக்கான பின்னணியை ஓரளவு விளக்கிவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்கிற பாத்திரத்தில் கவனம் ஈர்க்கிற அடர் தாடிக்காரர் இந்த படத்தை இயக்கியிருக்கிற அரவிந்த் ராஜகோபால்.
மகனை திருத்த முயற்சித்து முடியாமல் போவதிலும் ஏற்படும் முடிவாலும பரிதாபத்தை அள்ளுகிறார் ஜீவா ரவி.
கதையோட்டத்தின் அச்சமூட்டும் அத்தியாயங்களில் அதிரடியான பின்னணி இசையை தெறிக்க விட்டிருக்கிறார் சுந்தரமூர்த்தி. முன்னும் பின்னுமாக மாறி மாறிப் பயணிக்கும் கதையில் குழப்பமேற்படாதபடி எடிட்டிங் பணியை மேற்கொண்டிருக்கிறார் பூபதி வேதகிரி.
சதுரங்க விளையாட்டையும், ஜப்பானில் நடைமுறையிலிருந்த மன்னர் கால தண்டணை முறையையும் இணைத்துப் பிணைத்த கதைக்களம் நிச்சயமாக வித்தியாசமானதுதான். அதற்கேற்ப திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் கூட்டியிருந்தால் அஸ்திரத்தின் பாய்ச்சல் அசுரப் பாய்ச்சலாகியிருக்கும்!
Rating 3.5 / 5

