ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கிறது ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ். மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார்.
இந்த சீரிஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25-ம் தேதி முதல் ஸ்ட்ரீமாகவிருக்கிறது. முன்னதாக இந்த சீரிஸின் அனைத்து எபிசோடுகளும் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.
அதையடுத்து வெப் சீரிஸில் நடித்தவர்கள் மற்றும் உருவாக்க குழுவினர் அனைவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
நிகழ்வில் சீரிஸின் கதாநாயகி தன்ஷிகா பேசியபோது, ”உங்களோடு இணைந்து இந்த சீரிஸ் பார்த்தது மகிழ்ச்சி. தாய் மொழியில் மீண்டும் ஒரு படைப்பு, மிகவும் திருப்தியாக இருக்கிறது. ஐந்தாம் வேதம் மூலம் மிகச்சிறந்த குழுவுடன் இணைந்து பயணித்து மகிழ்ச்சி. என் சின்ன வயதில் மர்ம தேசம் மிகப்பெரிய பயத்தைத் தந்த சீரிஸ், எனக்கு மிகப்பிடித்த சீரிஸ், நாகா சார் கூப்பிடுகிறார் என்றவுடன் உடனே அவர் ஆபீஸ் போய்விட்டேன், ஐந்தாம் வேதம் பற்றிச் சொன்னார், அனு கதாபாத்திரம் பற்றிச் சொன்னார். ஐடியாவே பிரமிப்பாக இருந்தது, என்னை நம்பி இந்த பாத்திரம் தந்த நாகா சாருக்கு நன்றி. இந்த சீரிஸிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றார்.
இயக்குநர் நாகா பேசியபோது, ”ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன், 7 மாதம் திரைக்கதை வேலை மட்டும் பார்த்தோம். பின்னர் தான் அபிராமி வந்தார்கள், எல்லாம் இனிமையாக நடந்தது. என்னோடு இந்த திரைக்கதையை மணிகண்டன் இணைந்து எழுதினார். ஏஐ பற்றிய பயத்தை, நான் இந்த சீரிஸில் கொஞ்சம் பேசியிருக்கிறேன், இன்னும் 2 சீசன் இருக்கிறது, அதில் மனிதர்கள் வெற்றி பெறுகிறார்களா இல்லையா என்பது கதையாக இருக்கும். மக்களுக்கு இந்த சீரிஸ் பிடிக்குமென நம்புகிறேன்” என்றார்.

