அரசியல் களத்தின் சூழ்ச்சிகளை சுற்றிச் சுழலும் ‘தலைமைச் செயலகம்.’
தமிழ்நாடு முதலமைச்சர் அருணாச்சலம் உண்மையிலேயே நல்லவர்; ‘அரசாங்கமென்பது மக்களுக்கு நல்லது செய்வதற்கு மட்டுமே’ என்ற எண்ணத்தோடு ஆட்சி நடத்துபவர். அப்படியிருந்தும் அவர் ஊழல் வழக்கில் சிக்குகிறார். சிறை தண்டனை உறுதியாகிறது. அவருக்கு அடுத்து முதலமைச்சராவது யார் என்பது ZEE 5 தளத்தில் வெளியாகியுள்ள 8 எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த தொடரின் கிளைமாக்ஸ். முதலமைச்சர் ஊழல் வழக்கில் சிக்கியது எப்படி என்பதெல்லாம் திரைக்கதையில்… இயக்கம் வசந்தபாலன்
முதலமைச்சராக வருகிற கிஷோரின் தோற்றமும், தேர்ந்த நடிப்பும் அசத்துகிறது.
நல்ல நோக்கத்துடன் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான காய் நகர்த்ததில் கஷ்ட நஷ்டங்களைச் சந்திக்கிற ஸ்ரேயா ரெட்டி, கொற்றவை என்ற கனமான பாத்திரத்தில் கதைக்களத்தை தூக்கிச் சுமந்திருக்கிறார். அந்த ஆரம்பக் காட்சி மிரட்டல்.
முதலமைச்சரின் மகளாக, அதிகார ஆசையில் வலம்வருகிற ரம்யா நம்பீசன் ஆளுமையாக திரையில் நிறைந்திருக்க, போலீஸ் இன்ஸ்பெக்டராக பரத், ஒய் ஜி மகேந்திரன், ஆதித்யா மேனன், நிரூப், சாரா பிளாக், சித்தார்த் விபின், கவிதா பாரதி தர்ஷா குப்தா உள்ளிட்ட ஏராளமான பிரபலமான நடிகர், நடிகைகளின் பங்களிப்பு கதைக்களத்தை பலப்படுத்தியிருக்கிறது.
தன் பின்னணி இசையால், கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் ஓடும் தொடரில் இருக்கிற பரபரப்பின் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் ஜிப்ரான்.
தமிழ்நாட்டில் தொடங்கி ஜார்க்கண்ட் அது இதுவென வட மாநிலங்கள் பலவற்றில் கதையின் சம்பவங்கள் நடந்தேற அதற்கேற்றபடி கேமரா சுமந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரவிஷங்கர்.
தமிழக அரசியல் களத்தின் கடந்த 50, 60 ஆண்டுகால சம்பவங்களைத் திரும்பிப் பார்க்கும் விதமாக, அப்போதிலிருந்து இப்போது வரை ஆண்டவர்களை, ஆள்பவர்களை நினைவுபடுத்தும் விதமாக கதைக்களத்தை துணிச்சலாக அமைத்திருக்கும் வசந்தபாலன் சில காட்சிகளில் பாய்ச்சலின் வேகத்தைக் குறைத்திருக்கிறார்.
பரபரப்பான கிரைம் திரில்லருக்கு சமமான, சில காட்சிகளில் ரத்தம் தெறிக்கிற இந்த அரசியல் சதிராட்டம் சதியாட்டம் அரசியல் யாருக்கெல்லாம் பிடிக்குமோ, யாரெல்லாம் அரசியல் களத்தை உற்றுக் கவனிக்கிறார்களோ அவர்களுக்கு ரொம்பவே பிடிக்கும். மற்றவர்களும் தாராளமாய் பார்க்கலாம்!
Rating 4/5

