கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு கட்டத்தில் அவன் சந்திக்கும் பாலியல் தொழிலாளிக்கும் அவனுக்கும் காதல் மலர்கிறது. நாயகனின் குடிப்பழக்கத்தால் காதலியுடன் மோதல் உருவாகிறது.
நாயகன் திருந்தினாரா? அவர்களின் காதல் என்னவாகிறது? இந்த கேள்விகளுக்கான பதில்களே கதையின் மீதி…
நாயகன் ஆண்டணிக்கு அறிமுகப் படம். படத்தையும் அவரே இயக்கியிருக்கிறார். மனம்போன போக்கில் வாழ்வது, காதலில் விழுந்வுடன் திருந்த முயற்சித்து தோற்பது, காதலியை இழந்தபின் கலங்கி நிற்பது என நடிப்பு பரவாயில்லை ரகத்தில் இருக்கிறது.
பாலியல் தொழிலாளியாக, பெங்காலிப் பெண்ணாக வருகிற மதுமிதா தாஸ் பாலியல் தொழிலாளியாக இருப்பதன் வலியை உணர்த்துவதாகட்டும் காதல் தரும் உற்சாகத்தில் மிதப்பதாகட்டும் காதலன் தன் உணர்வுக்கு மதிப்பளிக்காத நிலையில் மனம் நொறுங்குவதாகட்டும் நடிப்பு அசத்தல்.
மற்ற கதாபாத்திரங்கள் மிகமிக குறைவாகவும் அவர்களின் பங்களிப்பு கச்சிதமாகவும் இருக்கிறது.
ஜோயல் ஜான்ஸின் பின்னணி இசையில் இருக்கிற அமைதி படத்திற்கு கிளாஸிக் டச் தருகிறது. ஒளிப்பதிவு தெளிவு.
ஏடாகூடமான இருவர் காதல், கல்யாணம் என இறங்கும்போது சந்திக்கும் பிரச்சனைகளை அலசியிருக்கும் இந்த படத்தில் சில வசனங்களும் சில காட்சிகளும் முகம் சுளிக்க வைக்கிறது. நல்ல விஷயம் பாலியல் தொழிலாள் அதுஇதுவென வில்லங்க விவகாரங்கள் கலந்திருக்கும் இந்த கதையில் படுக்கையறை காட்சிகளில் ஆபாசம் இல்லாமலிருப்பது.
Rating 2.5 / 5

