ஜென் ஸி தலைமுறையைக் கவரும் விதத்தில், அவர்களின் லைஃப்ஸ்டைலை மையப்படுத்திய படம்.
கதாநாயகன் ரகுவரன் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன், நன்றாகப் படித்தவன், பொறுப்பானவன், பெரு நிறுவனம் ஒன்றில் பணிபுரிபவன். அவனது காதலி அவந்திகா ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர். அந்த வாழ்க்கையை அனுபவிக்க காதலன் ரகுவரனைப் பயன்படுத்துகிறார். அவளுக்கு செலவு செய்ய தன் சம்பளம் போதவில்லை என்ற நிலையில் கடன் வாங்கி கடன் வாங்கி பெரியளவிலான பிரச்சனையில் சிக்குகிறார். அதனால் அவந்திகாவைப் பிரியும் முடிவுக்கு வருகிறார். இது கதையின் ஒரு பாதி.
அவந்திகாவுக்கு அவனைப் பிரிய மனமில்லை. இப்படியான சூழ்நிலையில், ‘நான் உனக்கு செலவு செய்ததைப் போல் எனக்கு நீ செலவு செய்தால் காதலை தொடரலாம்’ என்கிறாள். அதற்கு ஒத்துக் கொள்ளும் அவந்திகா படும்பாடு கதையின் மறு பாதி.
ஈல்லா பிரச்சனைகளையும் கடந்து காதலர்கள் இணைகிறார்கள். எது இணைத்து வைக்கிறது என்பது கிளைமாக்ஸ்.
கடன் வாங்கி காதலியை மகிழ்விப்பது, கடன் தொல்லையால் வேலையை இழப்பது, குடும்பத்தைப் பிரிவது, காதலி இழுத்துவிட்ட பிரச்சனையால் போலீஸில் சிக்குவது, காதலியின்பிரியத்தை உணர்வது என தனது இயல்பான நடிப்பால் கவனிக்கவும் வைக்கிறார்; கலகலப்பூட்டவும் செய்கிறார் ரகுவரனாக வருகிற பவிஷ்.
அவந்திகாவாக நாக துர்கா, லட்சணமாக இருக்கிறார். அதைச் செய் இதைச் செய் என்று சொல்லிச் சொல்லி காதலனை கடன்காரனாக்குவதும், அவனது தேவைகளை நிறைவேற்ற முடியாமல் அவதிப்படுவதுமாக எளிமையான நடிப்பால் கவர்கிறார்.
காவல்துறை உயரதிகாரியாக இயக்குநர் செல்வராகவன், பவிஷின் அப்பாவாக இயக்குநர் கே எஸ் ரவிக்குமார், நாகதுர்காவின் அம்மாவாக ரம்யா என திரண்டிருக்கும் நடிகர் நடிகைகளின் பங்களிப்பு கச்சிதம்.
ஃபாக்ஷன் (Foxn) இசையில் பாடல்களும் பின்னணி இசையும், பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவும் நேர்த்தி.
எதிர்பார்ப்புகளால் உடைகிற காதல் உண்மையான நேசத்தால் இணைகிற கதையை காமெடி கலாட்டாக்களுடன் அரங்கேற்றி ஜாலியான எளிமையான படம் பார்த்த திருப்தி தருகிறார் இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன்.
Rating 3 / 5

