ஒரு இளைஞன் தன்னுடன் தங்கியிருந்த இரண்டு இளைஞர்களைக் கொன்று, தீ வைத்து எரித்து அதே தீயில் அவனும் கருகி செத்துப் போகிறான். அதாவது இரண்டு கொலை, ஒரு தற்கொலை.
அந்த விவரங்கள் தெரிந்தும் அந்த வீட்டில் இந்த கதையின் நாயகன் மூன்று மாதகாலம் தங்குவதற்கு முடிவெடுக்கிறான். அப்போதே அவனை அமானுஷ்ய விஷயங்கள் பாடாய்ப் படுத்தப் போகிறது என்ற முடிவுக்கு வருகிறோம். மாற்றமே இல்லாமல் அதேபோல் நடக்கிறது.
அந்த வீட்டில் நடந்த கொலைக்கும் தற்கொலைக்கும் என்ன காரணம் என்பதும், அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்படும் நாயகனின் நிலைமை என்னவாகிறது என்பதும் மீதிக் கதை…
தன்னைச் சுற்றி நடக்கும் மர்மமான விஷயங்களைக் கண்டு பயப்படுவது, குழம்பித் தவிப்பது, தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வது என கதைக்குப் பொருத்தமான நடிப்பைத் தந்திருக்கிறார்.
நடந்த மரணங்களின் பின்னணியை கண்டறியும் பொறுப்பை ஏற்று, நாயகனை சுற்றி நடக்கும் மர்மங்களை அலசி ஆராயும் போலீஸ் அதிகாரியாக நட்டி நட்ராஜின் நடிப்பு கச்சிதம்.
கதாநாயகனை காதலித்து, பாடல் காட்சியில் ஆடுகிற வழக்கமான கதாநாயகியாக இல்லாமல் மிகச்சில காட்சிகளில் மட்டுமே தலைகாட்டி, ஆண்களால் பெண்களுக்கு நேர்கிற பாலியல் ரீதியிலான பாதிப்பை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார் அஞ்சனா முருகன். நடிப்பிலிருக்கும் தேர்ச்சிக்கு நல்ல கதைகளில் வாய்ப்பு கிடைத்தால் பெரியளவில் கவனம் பெறலாம்.
மரணங்கள் நடந்த வீட்டின் உரிமையாளராக வருகிற இயக்குநர் கே பாக்யராஜிலிருந்து சிறிய கேரக்டர்களில் விடிவி கணேஷ், இந்துமதி மணிகண்டன், சிபி சக்கரவர்த்தி என மற்றவர்களின் நடிப்பும், திகில் படங்களுக்கேற்ப அமைந்திருக்கும் மனு ரமேசனின் பின்னணி இசையும், ஒரே விட்டில் நடக்கும் சம்பவங்களை பதிவு செய்வதில் ஒளிப்பதிவாளர் ரவி சக்தியின் ஒளிப்பதிவு கோணங்களும் படத்தின் பலம்.
இயக்குநர் கல்யாண் கே.ஜெகன் காதல், காமெடி என மசாலா விஷயங்களை சேர்க்காமல் திகிலும் திரில்லுமாக ஒரு படத்தை தர வேண்டும்; திரைக்கதையில் எதிர்பாராத திருப்பம் இருக்க வேண்டும், படம் பார்ப்பவர்கள் படத்திலிருக்கும் வித்தியாசமான அம்சத்தை பாராட்ட வேண்டும் என யோசித்து களமிறங்கியிருக்கிறார். எளிமையான பட்ஜெட்டில் ரிசல்ட்டும் நன்றாகவே வந்துள்ளது.
வித்தியாசமான படங்களை விரும்புவோர் தாராளமாக டிக்கெட் போடலாம்.
Rating 3 / 5

