நாயகன் வீரா (விஷ்ணு விஷால்) தனக்கு அடங்கி ஒடுங்கி நடந்து கொள்வாள் என்ற எதிர்பார்ப்பில் கல்யாணம் செய்து கொண்ட பெண், குஸ்தி வீராங்கனை என்பதை அறிந்து அதிர்ச்சியடைவதும், அந்த வீராங்கனை தாய்மையடைவதுமாக நான்காண்டுகள் முன் கலகலப்பு விருந்து படைத்த ‘கட்டா குஸ்தி’ டீம் இரண்டாம் பாகத்தையும் காமெடி கலாட்டாக்களால் நிரப்பி வெற்றிப் படமாக்கியிருக்கிறது.
இந்த பாகத்தில் வீராவின் மனைவி குஸ்தி போட்டிகளில் நாடே தன்னை திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற பெரிய லட்சியத்தை அடைவதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார். தன்னைப் போலவே தன் மகளை எதிர்காலத்தில் குஸ்தி வீராங்கனையாக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார். வீரா, மகளை அவளுக்கு ஆர்வமிருக்கும் நடனத்தில் ஊக்குவித்துக் கொண்டிருக்கிறார். அதனால் கணவன் மனைவிக்குள் மோதல் வெடிக்கிறது. வீரா, மனைவியின் கோபத்தைக் கட்டுப்படுத்த ஒரு நடவடிக்கையில் இறங்க அது விபரீதமாகிறது. வீராவின் மனைவியின் லட்சியத்துக்கு ஆப்பு வைக்கிறது. கணவனும் மனைவியும் பிரிகிறார்கள்; நீதிமன்றத்தில் நுழைகிறார்கள்…
பிரிகிற அளவுக்கு வீரா செய்த குற்றம், அதன் விளைவுகள் என பரபரக்கும் காட்சிகள் கிரைம் திரில்லருக்கான பரபரப்பைக் கொடுக்க, கலந்து கட்டியிருக்கும் காமெடி களேபரங்கள் சிரித்து ரசிக்க உத்தரவாதம் தருகிறது… இயக்கம் கடந்த பாகத்தை இயக்கிய அதே செல்லா அய்யாவு
மனைவி விரும்பிய துறையில் ஜெயிக்க வேண்டும், தன்னுடனும் மகளுடனும் நேரம் செலவிட வேண்டும் என விரும்புவது, மனைவி அதை புரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் நடந்துகொள்ளும்போது இழுத்துப் பிடிக்க நினைப்பது, அந்த நினைப்பு விபரீத விளைவுகளை உருவாக்குவது, தவறு எதுவும் செய்யாமல் குற்றவாளியாகி மனைவியை பிரிவது, தவறு எங்கே நடந்தது எப்படி நடந்தது என அலசி ஆராய்ந்து கண்டறிவது, மகள் மீது உயிரையே வைத்திருப்பது, மல்யுத்த களத்தில் மனைவியுடன் மோதி முத்தமிட்டுக் கிறங்கடிப்பது, மனைவியைப் பிரிந்திருக்கும் தருணத்தில் வேறொரு பெண்ணுடன் குதூகலமாக பொழுதைக் கழிப்பது, ஆக்சன் காட்சிகளில் சீறிப் பாய்வது என வீராவாக வருகிற விஷ்ணு விஷாலுக்கு ஏகப்பட்ட வேலைகள். எல்லாவற்றையும் பொருத்தமான உடல்மொழியோடு செய்திருக்கிறார்.
குஸ்தியில் பெரிதாய் சாதிக்க வேண்டுமென்ற வெறி, அதற்கு தடையாக இருக்கிற கணவன் மீது ஆக்ரோஷம், தன் பேச்சைக் கேட்காமல் அப்பா செல்லமாக இருக்கிற மகள் மீது எரிச்சல் என விதவிதமான உணர்வுகளை அளவாக அழகாக தன் நடிப்பில் கொண்டு வந்திருக்கும் ஐஸ்வர்ய லெஷ்மி உடற்கட்டின் கவர்ச்சியாலும் கவர்கிறார்.
மகளாக வருகிற சிறுமி ஷாராவின் கியூட்டான நடிப்பும் துடுக்கான பேச்சும் அசத்தல் ரகம். நாள் முழுக்க ரசிக்கலாம்.
சிறுமியின் கிளாஸ் டீச்சராக வருகிற சதைப்பிடிப்பான மோக்ஷா கதையோடும் பயணிக்கிறார்; கிளாமருக்கும் உதவுகிறார். நீதிபதியாக வருகிற ரம்யா கிருஷ்ணன் தன் பங்குக்கு சிரிப்பலையை உருவாக்குகிறார்.
கருணாஸ் – லிஸி ஆண்டனி ஜோடியின் பங்களிப்பும் கலகலப்பூட்டுகிறது. யோகிபாபு, காளி வெங்கட், முனீஸ்காந்த், கஜராஜ், ஸ்ரீஜாரவி என மற்றவர்களும் குறைவைக்கவில்லை.
ஷான் ரோல்டன் இசையில் சம்பவக்காரி பாடல் உற்சாகமூட்ட, மகராசி பாடல் மனதை தொடுகிறது. பின்னணி இசையும், கே எம் பாஸ்கரனின் நேர்த்தியான ஒளிப்பதிவும் படத்துக்கு பலம்.
‘இது லாஜிக் இல்லா மேஜிக் டைப் படம்; டிக்கெட்டுக்கு கொடுத்த காசுக்கு ஒர்த்; செமையா சிரிச்சு என்ஜாய் பண்ணோம்.’
இது படம் பார்த்தவர்கள் ஒட்டுமொத்தமாக சொல்லிக் கொண்டிருக்கிற, சொல்லப் போகிற ஒரே விஷயம். நீங்கள் உங்கள் குடும்பத்தோடு பார்த்தாலும் அதையேதான் சொல்வீர்கள்.
இரண்டாம் பாகம்னாவே சொதப்பலாத்தான் இருக்கும் என்று மக்கள் மனதில் இருக்கிற தமிழ் சினிமா குறித்த கருத்தை மாற்றியதற்காக படக்குழுவுக்கு பாராட்டுப் பூங்கொத்து!
Rating 4 / 5 

