டார்க் காமெடி ஜானரில் முழுமையான பொழுதுபோக்குப் படைப்பு.
அர்ஜுன்தாஸ், யோகிபாபு, அன்னா பென், வடிவுக்கரசி என நான்கு பேருமாகச் சேர்ந்து சிறிய உணவகம் நடத்தி வருகிறார்கள். ஒரு சிறுவனும் உடனிருக்கிறான். ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் கடத்தப்பட, அர்ஜுன்தாஸும் அவருடன் குடும்பமாக இணைந்திருக்கும் நான்கு பேரும் யார், அவர்களின் பின்னணி என்ன என்பதை ஃபிளாஷ்பேக்’கில் பார்க்க முடிகிறது.
அதில் அர்ஜுன்தாஸ் உள்ளிட்ட நான்கு பேரும் விதவிதமான மோசடியில் ஈடுபட்டு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் சேர்த்த விவரம் நமக்கும் தெரிகிறது. அவர்களின் மோசடி பற்றி தெரிந்த போலீஸ் ஆபீஸர் ஒருவர் சிறுவனைக் கடத்தியிருக்கிறார் என்பது அவர்களுக்குத் தெரிகிறது.
அவர்களின் மோசடிகள் எப்படிப்பட்டது, ஏன் அதில் ஈடுபட்டார்கள், சிறுவன் கடத்தப்பட்டது எதற்காக, அவனை எப்படி மீட்கிறார்கள் என்பதெல்லாம் ஹரிஷ் துரைராஜ் இயக்கியிருக்கும் கான் சிட்டியின் பரபரப்பான காட்சிகள்…
ஹீரோவும் இல்லை; வில்லனும் இல்லை. அர்ஜுன்தாஸுக்கு கதையின் முக்கிய கதாபாத்திரம். புத்திசாலித்தனமாக மோசடி செய்து பணம் சேர்ப்பவனாக, உடனிருக்கிற சிறுவனுக்கு தான் சொந்த அப்பா இல்லையென்றாலும் அன்பு செலுத்துவதில் நெகிழ வைப்பவனாக, சிறுவன் கடத்தப்பட்டு ஆபத்தான சூழலில் சிக்கிய நிலையில் தவித்துப் போகிறவனாக உருவாக்கப்பட்ட தனது பாத்திரத்தின் கனம் உணர்ந்து நடித்திருக்கிறார். காமெடி கலகலப்புக்கும் உதவியிருக்கிறார்.
அம்மாவாக வடிவுக்கரசி, மகனாக யோகிபாபு இருவரும் சேர்ந்து டிரஸ்ட் நடத்துகிறோம் என்ற பெயரில் பணம் சேகரிப்பது, அன்னாபென் யார் யாருடைய வீட்டையெல்லாமோ லீஸுக்கு விட்டு கரன்சிகளைக் கைப்பற்றுவது என எல்லாமே ரசிக்க வைக்கிறது.
போலீஸ் ஆபீஸராக நந்தகோபால். கடமையைச் செய்யும்போது வெறித்தனமும், பதவி விலகியபின் வில்லத்தனத்தில் கெத்தும் காட்டுகிறார்.
பொன்வண்ணன், விடிவி கணேஷ், அருள்தாஸ் , ராதாரவி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், பரத்வாஜ் ரங்கன், இமான் அண்ணாச்சி, ரகு எசக்கி என பலர் பெரியதுமான கதாபாத்திரங்களில் வந்து போகிறார்கள். சிறுவனின் துடிப்பான நடிப்பும் கவர்கிறது.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவும், ஷான் ரோல்டனின் இசையும் அருள் மோசஸ் ஏ.வின் படத்தொகுப்பும் கதையின் போக்கிற்கு ஊட்டமளித்திருக்கின்றன.
படத்தின் முதல் பாதியின் பெரும்பாலான காட்சிகள் ஒரு பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்தும் அலுவலக வளாகத்திலேயே சுற்றிக் கொண்டிருப்பது சலிப்பு. பின்பாதியில் காமெடி கலாட்டாக்கள் திருப்தியாக இருக்கிறது; கதையோட்டம் பரபரப்பான திரில்லரை பார்ப்பது போன்று மனதுக்கு சுறுசுறுப்பு தருகிறது.
அதனால் இந்த கான் சிட்டிக்கு தாராளமாய் டிக்கெட் போடலாம். தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட படங்களைப் பார்த்தபோது கிடைத்த அனுபவம் பெறலாம்.
Rating 3.5 / 5 

