வலிகளைக் கடந்து வரலாறாகும் இளைஞன்.
பெத்தி கிரிக்கெட் விளையாட்டில் கில்லி. கூலிக்காக விளையாடுவது அவனது வழக்கம். அந்த விளையாட்டில் ஒரு குறிப்பிட்ட உயரத்தை தொட்டபின், அடுத்ததாக மல்யுத்தம் கற்று அதிலும் சாதனை படைக்கிறான். கால ஓட்டத்தில் ஒரு காலை இழக்கிறான். இழந்தபின்னும் ஓட்டப்பந்தயத்தில் ஓடி இந்தியாவே வியக்கும் அளவுக்கு சாம்பியனாகிறான். ஊர் உலகுக்கு முன்னுதாரணம் ஆகிறான்.
அப்படி முன்னுதாரணம் ஆகிறவன், அதுவரை இந்திய குடிமகன் என்ற அடையாளமே இல்லாதவன்; அவன் வசிக்கும் மலை கிராமம் இந்திய வரைபடத்திலேயே இல்லாதது. இந்திய அரசாங்கத்தால் இந்தியாவிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட நிலத்தில், ஆதிக்க வர்க்கத்துக்கு அடிமையாக இருந்தவன் அவன்.
அவன் யார், அவனது திறமை எப்படிப்பட்டது, சாதனையாளனாக உயர்வதற்கு முன் அவன் அனுபவித்த வலிகள், கொடூரங்கள், சவால்கள் என அத்தனையும் முன்னும் பின்னுமாக காட்சிகளாக விரிவது சிலிர்ப்பூட்டும் அத்தியாயங்கள்.
பெத்தி மூலம் அவனது மலை கிராமத்துக்கு விடியல் கிடைக்கிறது என்பது கிளைமாக்ஸ் தருகிற உற்சாகம்… இயக்கம் புச்சிபாபு சனா
ராம்சரண் படத்தின் தூண். உண்மையிலேயே உடம்பையும் கை கால்களையும் தூண்களைப் போல் மாற்றியிருக்கிறார். தோற்றத்தின் பிரமாண்டம் அவர் செய்கிற ஹீரோயிஸங்களுக்கு நம்பகத் தன்மை தந்து விடுகிறது. ஏற்ற கேரக்டருக்காக படம் முழுக்க உடலை வருத்திக் கொண்டு நடித்திருப்பது அவரது அர்ப்பணிப்புக்கு சான்றாக இருக்கிறது.
மல்யுத்த பயிற்சியாளராக சிவராஜ் குமார் தோற்றத்தில் கெத்து குறைவாக தெரிந்தாலும் நடிப்பில் கம்பீரம் போதுமான அளவில் இருக்கிறது.
ஜெகபதி பாபு அடையாளமே தெரியாத மேக்கப்பில், தனது ஊர் ரயில் நிறுத்தமாக மாற வேண்டும் என்பதற்காக ஆண்டாண்டு காலமாக போராடி, ரத்தம் சிந்தி, போராளிக்கான இலக்கணமாக உயர்ந்து நிற்கிறார்.
ஜான்வி கபூர் கவர்ச்சிக்கும் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு ஆடவும் பயன்பட்டிருக்கிறார்கள்.
திவ்யந்து, விஜி சந்திரசேகர், போமன் இரானி, ஜான் விஜய்… நட்சத்திர அணிவகுப்பு நீளமாகவும், அவர்களின் பங்களிப்பு கச்சிதமாகவும் இருக்கிறது.
பின்னணி இசையில் ஏ ஆர் ரஹ்மான் காட்சிகளின் பரபரப்பை எகிறச் செய்கிறார். கதைக்களத்தின் பிரமாண்டத்தை பல மடங்கு அதிகரித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு.
திறமையால் உலகை வெல்லலாம் என்பதற்கு உலகம் முழுக்க எத்தனையோ உதாரண மனிதர்கள் இருக்கிறார்கள்; அவர்களில் ஒருவரை மையப்படுத்தி சினிமா மசாலாக்கள் சேர்த்த பெத்தி, தெலுங்கு சினிமா வரலாற்றில் கதையம்சமும் பிரமாண்டமும் கதாநாயகனின் அசத்தலான பங்களிப்புமாக தனி வரலாறு படைக்கிறது!
Rating 3 / 5

