கேரள காட்டுப்பகுதியான ஆனைக்கொல்லியில் யானைகளைக் கொன்று தந்தம் கடத்துவதை தொழிலாக செய்கிறான் மாரி. ஒரு கட்டத்தில் அவனுக்கு எதிரிகள் உருவாக, காவல்துறையும் சுற்றி வளைக்கிறது. மாரி, ஆண்டனி என்ற இளைஞனை தன் கடத்தல் தொழிலில் ஈடுபடுத்தி அவனது சாமர்த்தியத்தால் எதிரிகளை அடக்கி ஒடுக்குகிறான். கடத்தல் தொழிலை வழக்கம்போல் செய்கிறான். காலங்கள் கடந்துபோக, அதே ஆண்டனி மாரிக்கு எதிரியாகிறான்.
அதற்கு என்ன காரணம், மாரிக்கும் ஆண்டனிக்குமான மோதலின் விளைவாக என்னவெல்லாம் நடக்கிறது என்பதையெல்லாம் பரபரப்பான திரைக்கதையாக்கியிருக்கிறார் இயக்குநர் பால் ஜார்ஜ்.
மாரியாக சுனில் வில்லத்தனத்தில் கொடூர முகம் காட்ட, அவருக்கு எதிரியாகி அவர் அடிமைபடுத்தி வைத்திருக்கும் மக்களுக்கு விடுதலை பெற்றுத் தருகிற ஹீரோயிஸ எபிசோடுகளை அழகாக கையாண்டு மனதில் நிறைகிறார் ஆண்டனியாக வருகிற ஆண்டனி வர்கீஸ்.
துஷாரா விஜயன் படம் முடிவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக ஒன்றிரண்டு காட்சிகளில் தோன்றி, ராணுவ வீரர்களை வழிநடத்தும் கமாண்டோ லெவலில் மக்கள் போராளியாக துப்பாக்கியேந்தி, ஆக்சனில் அதிதடி காட்டி கம்பீரமாக களமாடி செல்கிறார்.
கபீர் துகான் சிங் வில்லனாக மிரட்ட, பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் உள்ளிட்டோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
ரவி பஸ்ரூரின் பின்னணி இசை பரபரப்பான காட்சிகளுக்கு சுறுசுறுப்பு தருகிறது. கிட்டத்தட்ட படம் முழுக்க ஒருவித இருள் சூழ்ந்திருக்க ஒளிப்பதிவாளர் ரெனாடைவ் அதற்கேற்றபடி கோணங்களை அமைத்து காட்சிகளின் தரத்தை தூக்கலாக்கியிருக்கிறார்.
அடர்ந்த காடுகள், யானைகளை கொடூரமாக கொல்வது என பதைபதைக்கும் காட்சிகளில் சிஜி தொழில்நுட்பப் பங்களிப்பு மிரட்டல்.
கதையாக கவர்வது சந்தேகம்தான் என்றாலும் திரைக்கதையிலிருக்கிற வேகம் ஆடியன்ஸுக்கு பிடித்துப் போகும். மேக்கிங்கிலிருக்கும் பிரமாண்டம் அசத்தும்.
Rating 3 / 5 

