தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன் என்ன செய்தான் என்பதும், அவளைப் பிரிந்த காதலன் என்னவாகிறான் என்பதும் மீதிக் கதை. இயக்கம் ரத்ன குமார்
நாயகன் விது ஒடிசல் தேசமும், ஒடுங்கிய முகமும், அண்ணாந்து பார்க்கும் உயரமுமாக இருக்கிறார். காதல் தருணங்களில் அசடு வழிகிறார்; காதல் தோல்வியில் பரிதாபமாக வலம் வருகிறார்; மக்களுக்காக உழைத்து புகழ் பெறும்போது உற்சாகம் காட்டுகிறார். நடிப்பு பரவாயில்லை ரகம்.
‘என்னை சுத்தி சுத்தி வந்தது போதும்; அனுபவிச்சிட்டா ஆசை தீர்ந்துடும்னா அனுபவிச்சிக்கோ. அதுக்கு பிறகாச்சும் வேலை வெட்டிக்கு போ; கனவு லட்சியம்னு ஏதாச்சும் இருந்த அடையுற வழிய பாரு’ என காதலனை அக்கறையுடன் டீல் செய்யும் விதத்திலும் நடனத்திலும் கவனம் பெறுகிறார் நாயகி பிரித்தி அஸ்ராணி.
நாயகனின் நண்பனாக அவினாஷ் கதையின் முக்கியமான தருணங்களில் உடனிருக்கிறார்; காமெடி கலகலப்புக்கும் உதவுகிறார். நாயகனின் அம்மாவாக ஆதிரா தேர்ந்த நடிப்பால் மகன் மீது காட்டும் பாசம் நெகிழ வைக்கிறது. மற்றவர்களும் கச்சிதமாக நடித்திருக்க தொடர்ச்சியாய் வந்துகொண்டேயிருக்கும் பாடல்களின் இசையில் இதம் கூட்டியிருக்கிறார் ஷான் ரோல்டன். பின்னணி இசையில் சோக கீதம் அதிகம். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் மெருகேறியிருக்கின்றன.
காதலில் மூழ்கிக் கொண்டிருந்தவன், அதிலிருந்து விலகி, தன் அடையாளம் எதுவென கண்டறிந்து புகழ் வெளிச்சத்துக்கு வந்து, காதலையும் மீட்டெடுக்கும் சுவாரஸ்யமான கதையில் உருவான இந்தபடம் சிலபல வருடங்கள் முன் திரைக்கு வந்திருந்தால் ரசிகர்களின் வரவேற்பு பலமாக இருந்திருக்கும்.
Rating 3 / 5

