அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளது. இது ரசிகர்களுக்கும் சினிமா பிரியர்களுக்கும் கொண்டாட்ட தருணமாக மாறியுள்ளது. 

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ‘அமர்க்களம்’ வெளியானது. இதற்கு முன்பு மென்மையான காதல் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வந்த அஜித், இந்த படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் எடுத்தார். இந்த ஆக்ஷன் அவதாரம்தான் இன்று அவரின் மாஸ் ஐகான் இமேஜூக்கு அடித்தளம் அமைத்தது.
இந்த படத்தில்தான் அஜித் குமார் மற்றும் ஷாலினி இருவரும் முதன்முறையாக இணைந்து நடித்தனர். பின்னர் அவர்கள் வாழ்க்கையிலும் ஒன்றிணைந்து, தமிழ் சினிமாவின் மிகவும் நேசிக்கப்படும் தம்பதிகளாக மாறினர். இதனால், ‘அமர்க்களம்’ திரைப்படம் ரசிகர்களின் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளது. ஏப்ரல் 24 அஜித்- ஷாலினி ஜோடியின் திருமண நாளை முன்னிட்டு இந்தப் படம் மீண்டும் வெளியாவது ரசிகர்களுக்கு உணர்வுப்பூர்வமாகவும் அதே சமயம் கொண்டாட்டமாகவும் மாறியுள்ளது.
‘அமர்க்களம்’ ஒரு திரைப்படம் என்பதை தாண்டி காதல், தீவிரம் மற்றும் மறக்க முடியாத பல நினைவுகளையும் கொண்டிருக்கிறது. அஜித்தின் ஈர்க்கும் நடிப்பு, ஷாலினியின் மனதை கவரும் நடிப்பு, பரத்வாஜின் ஆன்மாவை வருடும் இசை என இவை அனைத்தும் ‘அமர்க்களம்’ படத்தை கிளாசிக்காக மாற்றியிருக்கிறது. தற்போது அதே மேஜிக் 4கே டிஜிட்டல் வடிவத்தில் பெரிய திரையில் மீண்டும் வருகிறது. முதன் முறையாக படம் வெளியான சமயத்தில் பாக்ஸ் ஆஃபிஸில் எப்படி பெரும் வெற்றி பெற்றதோ அதே வெற்றியையும், ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தில் இடம்பெற்றுள்ள ‘உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு…’ பாடல் வரிகள் தலைமுறைகள் தாண்டி இன்றைய காதலுக்கும் பொருந்திப் போகிறது. அதேபோல் ‘சத்தமில்லாத’ பாடலில் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் சக்திவாய்ந்த குரலும், அஜித் குமாரின் வலுவான நடிப்பையும் மீண்டும் பெரிய திரையில் காணத் தவறாதீர்கள். இன்றளவும் இந்த படத்தின் பாடல்களும் காட்சிகளும் அன்றைய ரசிகர்களுக்கும் புதிய தலைமுறைக்கும் ஒரே அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்துகிறது. ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனத்தின் கார்த்திக் வெங்கடேசன் இந்தப் படத்தை தமிழ்நாடு முழுவதும் மீண்டும் வெளியிடுகிறார்.
25 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்தை நிறைவு செய்த ‘அமர்க்களம்’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாவது வெறுமனே ரீ-ரிலீஸ் மட்டுமல்ல, அது நினைவுகளின் திருவிழா, காதலின் கொண்டாட்டம்!

