காதல் காமம் இரண்டையும் இணைத்துக் கொண்டிருக்கும் சஸ்பென்ஸ் திரில்லர்.
சென்னையில் பணிபுரிகிற ஹீரோவும் அவரது நண்பர்கள் மூன்று பேரும் சேர்ந்து விலைமாது ஒருவரை அழைத்துக் கொண்டு வார விடுமுறையைக் கழிப்பதற்காக ஊட்டிக்கு போகிறார்கள். ஹீரோ, நண்பர்கள் மூன்று பேருக்கும் சரக்கை அளவுக்கதிகமாக ஊற்றிக் கொடுக்கிறார். அவர்கள் போதையில் மூழ்குகிறார்கள். அதனால் அழைத்துச் சென்ற பெண்ணை அனுபவிக்க முடியாமல் போகிறது.
ஹீரோ குடி போதையைத் தவிர்த்து, அவளுடன் நேரத்தைச் செலவிடுகிறார். காரில் சில இடங்களுக்கு கூட்டிச் செல்கிறார். அப்படி பேசிப்பழகும்போது அவளை காதலிப்பதாக சொல்கிறார். அவள், ‘என்னிடம் வருபவர்களில் ஒரு சிலர் இப்படிதான் சொல்வார்கள்’ என்று சொல்லி, அவனது காதலை உளறலாக எடுத்துக் கொள்கிறாள். ஆனால், ஹீரோ உண்மையிலேயே அவள் மீது காதல் வயப்படுகிறார்.
இப்படியாக இரண்டு நாட்கள் கடந்துபோக திடீரென அந்த பெண்ணும், நண்பர்களில் ஒருவரும் காணாதுபோக ஹீரோவும் உடனிருக்கும் நண்பர்களும் அவர்களைத் தேடுகிறார்கள். போலீஸும் களமிறங்குகிறது.
காணாமல் போனவர்களுக்கு என்னவாயிற்று? விலைமாது மீது ஹீரோவுக்கு காதல் உருவான காரணம் என்ன? என்கிற கேள்விகளுக்கு பதில்களே மீதிக்கதை…
ஹீரோவாக ஸ்ரீகாந்த், உடன் வந்துள்ள பெண்ணை நண்பர்கள் அனுபவித்துவிடக் கூடாது என்பதற்காக மதுபோதையில் தள்ளிவிடுவது, விலைமாதுவிடம் காதலைச் சொல்வது, அவளை அனுபவிப்பதற்காக சுற்றி வளைக்கும் பொறுக்கிகளிடம் சண்டை போடுவது என காட்சிகள் வழங்கப்பட்டிருக்க, நடிப்பில் அதற்கேற்ற உணர்வுகளையும் உணச்சிவசப்படுதல்களையும் சரியாக பிரதிபலிக்கிறார்.
அமுல்பேபி முகத்தோடு இருக்கிற ஸ்ருஷ்டி டாங்கே விலைமாதுவாக மெல்லிய கவர்ச்சி காட்டி, பேச்சில் கிறக்கமூட்டுகிறார்.
நண்பர்களாக வருகிற விஜே பப்பு, பிளாக் பாண்டி,விக்ரம், போலீஸ் அதிகாரியாக ஜான் விஜய், அவருக்கு கீழ் பணிபுரியும் அதிகாரியாக தேவி பிரியா, ஸ்ருஷ்டியின் அம்மாவாக திவ்யா என மற்றவர்களின் நடிப்பு கதையின் தேவையுணர்ந்ததாக இருக்கிறது.
தாஜ்நூரின் பின்னணி இசை கதையின் பரபரப்பான நகர்வுக்கு பொருத்தம். அந்த ஒரு பாடலையும் ரசிக்க முடிகிறது. ஒளிப்பதிவாளர் கோகுல் ஊட்டியின் அழகை திரில்லர் சப்ஜெக்டுக்கேற்ற விதத்தில் பதிவு செய்திருக்கிறார்.
விலைமாதுவின் வாழ்க்கை, விலைமாது என தெரிந்தே அவளைக் காதலிக்கும் இளைஞன், சந்தர்ப்பச் சூழ்நிலையால் நடக்கும் உயிரிழப்பு, அதன் தொடர்ச்சியாக கொலை என திரைக்கதையை விறுவிறுப்பாக அமைத்திருக்கும் இயக்குநர் மணிபாரதி, விலைமாது சார்ந்த கதையை ஆபாசமில்லாமல் உருவாக்கியிருப்பதற்காக பாராட்டுக்களைக் குவிக்கிறார்.
Rating 3 / 5


