இந்த கதையில் ரொக்கப்புலி, பாண்டி என இரண்டு ஹீரோக்கள். அவர்கள் தாங்கள் வாழும் கிராம மக்களின் நலனுக்கான கஞ்சா கடத்துவதை தொழிலாக செய்கிறார்கள். அவர்களை எந்த போலீஸ் வந்தாலும் எதுவும் செய்ய முடிவதில்லை. அவர்களை அப்படியெல்லாம் விட்டுவிட முடியாது என ஒரு பெண் போலீஸ் அதிரடியாக களமிறங்குகிறார். அவராலும் ஒரு கட்டத்துக்கு மேல் அவர்களை தண்டிக்க முடியவில்லை. அடுத்ததாக இன்னொரு டெரரான அதிகாரி அவர்களைக் குறி வைக்கிறார். அதையும் தாண்டி கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். காவல்துறை – கடத்தல் துறை என இரு தரப்புக்குமான மோதல் சூடுபிடிக்கிறது.
மோதலில் வெற்றி பெற்றது கடத்தல்காரர்களா, அவர்களை கட்டம் கட்டிய காவல்துறையா என்பது கிளைமாக்ஸ்…
பாண்டியாக சண்முகப்பாண்டியன் விஜயகாந்த். அவருக்கு வழங்கப்பட்டிருப்பது அடிதடி, வெட்டுக்குத்து, கடத்தல் என வில்லன்கள் செய்கிற வேலையை ஹீரோவாக இருந்து செய்கிற பொறுப்பு. அவரிடம் அப்படியான ஹீரோயிஸ பங்களிப்புக்கு பொருத்தமான முகவெட்டும் உடற்கட்டும் கச்சிதமாக அமைந்திருக்க, நடிப்பில் எல்லாவித உணர்வும் கச்சிதமாக டெலிவரி ஆகிறது. நல்ல கதைகள் அமைந்தால் முன்னணி ஹீரோவாகலாம்.
ரொக்கப்புலியாக வருகிற சரத்குமார் கடத்தல் தொழிலுக்குக்கான பலத்தை புத்திசாலித்தனங்களாலும், அடிதடி, வெட்டுக்குத்து என துணிச்சலாலும் கொடுக்கிறார். அவருக்கும் சண்முகப்பாண்டியனுக்குமான மாமா, மாப்ள பாசப்பிணைப்பில் இருக்கும் கெமிஸ்ட்ரி படத்துக்கு உயிரோட்டம் தருகிறது.
பெண் போலீஸ் அதிகாரியாக தார்ணிகா காட்டும் அதிரடி ஆர்ப்பாட்டங்கள் பரபரப்பாகவும், நடிப்பு ஓகே ரகமாகவும் இருக்கிறது. அவருக்கும் ஹீரோவுக்குமான காதல் காட்சிகள் பெரிதாய் எந்த தாக்கத்தையும் தரவில்லை.
காவல்துறை உயரதிகாரியாக மிரட்டியிருக்கிறார் சுஜித் சங்கர். கல்கி ராஜா, தருண் கோபி, ஸ்ரீ ரெட்டி, முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான் என மற்றவர்கள் கதைக்கு தேவையானதை குறையின்றி செய்திருக்க, யுவன் சங்கர் ராஜாவின் இசையில் அடிக்கடி எட்டிப் பார்க்கும் பாடல்கள் மனதுக்குள் தங்கும் ரகமாக இல்லை. பின்னணி இசையில் ஸ்பெஷலாக ஏதுமில்லை.
தரமான ஒளிப்பதிவை தந்திருக்கிறார் பாலசுப்ரமணியெம்.
இப்போது வைகை அணை அமைந்திருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் விவசாயம் நடந்திருக்கிறது. அந்த வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு சீரியஸாகவும் சிரிப்பூட்டும் விதமாகவும் காட்சிகளைக் கோர்த்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். நல்ல முயற்சி. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பையும் காமெடியில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தையும் கூட்டியிருந்தால் ‘கொம்புசீவி’க்கு கிடைத்திருக்கும் பரவலான வெற்றி.
Rating 2.5 / 5

