புதுமையான கதையில் அதிரடி கிளப்பும் ‘ஆர்யன்.’
ஒரு நல்லவர், திறமையாளர் தினம் ஒருவராக ஐந்து பேரை கொல்லப் போகிறேன் என்று உலகமே பார்க்கும் டி வி நிகழ்ச்சியொன்றில் சொல்லிவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார். அவர் சொன்னபடி முதல் கொலையும் நடக்கிறது. காவல் துறை களமிறங்குகிறது.
கொலையாளி யார் என்பது ஆடியன்ஸுக்கு தெரிந்துவிடுகிற நிலையில், அவன் யாரையெல்லாம் கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறான், காரணம் என்ன? கொலைகளை போலீஸாரால் தடுக்க முடிந்ததா? தற்கொலை செய்து கொண்டவன் எப்படி கொலைகளைச் செய்ய முடியும்? என்பதற்கெல்லாம் பீதி கிளப்பும் காட்சிகளின் மூலமாக பதில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பிரவீன் கே.
போலீஸ் உயரதிகாரியாக விஷ்ணு விஷால். முகத்தை மீசையில்லாமல் கரடு முரடாக மாற்றிக்கொண்டிருப்பவர் துப்பறிவதில் விவேகத்தையும் கொலைகளை தடுப்பதில் வேகத்தையும் காட்டி கதையின் பரபரப்புக்கு பொருத்தமான நடிப்புத் தீனி போட்டிருக்கிறார்.
சைக்கோ கொலைகாரனாக செய்யும் கொலைகளில் புத்திசாலித்தனத்தை அப்ளை செய்யும் இயக்குநர் செல்வராகவனின் நடிப்பில் ரசிக்கும்படியான அலட்டலும் மிரட்டலும் இருக்கிறது.
டிவி நிகழ்ச்சி நெறியாளராக வருகிற ஷ்ரத்தா ஸ்ரீநாத் தனக்கு கிடைத்த குறைவான காட்சிகளில் முடிந்தளவு கம்பீரம் காட்டி கவனம் பெறுகிறார்.
விஷ்ணு விஷாலின் மனைவியாக வருகிற மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு நேர்த்தி.
கிட்டத்தட்ட கதையின் அத்தனை காட்சிகளிலும் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டிருக்க அதற்கேற்ப பின்னணி இசையில் வெறித்தனம் காட்டியிருக்கிறார் ஜிப்ரான் வைபோதா.
தரமான ஒளிப்பதிவு, கச்சிதமான எடிட்டிங் என மற்ற துறைகளின் பங்களிப்பும் படத்தை தாங்கியிருக்கின்றன.
கையாளப்பட்டிருப்பது, விஷ்ணு விஷால் நடித்து சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘ராட்சசன்’ டைப் சைக்கோ கில்லர் கதை; ஏறக்குறைய அதிலிருந்த பரபரப்பும் விறுவிறுப்பும் இதிலும் இருக்கிறது; ஜீரணிக்க கஷ்டமாக இருந்தாலும் நல்லவர்கள் மட்டுமே குறிவைத்துக் கொல்லப்படுகிற புதுமையாலும் அதற்கான காரணத்தாலும் தனித்துவம் பெறுகிறான் ‘ஆர்யன்.’
Rating 4 / 5

