மழை பெய்யாவிட்டாலும் பாதிப்பு; அதிகம் பெய்தாலும் பாதிப்பு.
பேங்கில் லோன் கிடைப்பது கஷ்டம்; விளைச்சல் எதிர்பார்த்தபடி இல்லாவிட்டால் கிடைத்த லோனை திருப்பிக் கட்டுவது கஷ்டம்.
ரசாயன உரம் போட்டால் விளைநிலம் பாழாகும்; போடாவிட்டால் பயிர்களை செழுமையாக வளர்த்து ஆளாக்குவது சிரமம். இயற்கை உரத்திலேயே விவசாயம் செய்யலாம் என்றால் செலவு அதிகரிக்கும்.
இப்படி வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம். அந்தளவுக்கு ரிஸ்க்கானது விவசாயம்.
இந்த படத்தின் நாயகன் விவசாயி. அவனுக்கு வருகிற சோதனை வித்தியாசமானது; விசித்திரமானது. அவனுக்கு தெரியாமலே அவனது விளைநிலம் வங்கி மூலம் ஏலத்தில் விற்கப்படுகிறது. அதை மீட்க அவன் பெரியளவில் கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது; சட்டப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் அதிகளவில் சினிமாத்தனம் கலக்காமல் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் வி கஜேந்திரன்.
ஏற்கும் கேரக்டராகவே மாறிவிடுகிற விதார்த், எளிய விவசாயியாக, தன் நிலத்தை பறிகொடுத்து மீட்க முடியாமல் பரிதவிப்பவராக, தன்னை சூழ்ச்சி செய்து நிலத்தை பறித்துக்கொண்ட வங்கிக்கு எதிராக கோர்ட்டில் வாதாடுபவராக, பாசக்கார கணவனாக, பிரியமுள்ள தகப்பனாக கனமான கதாபாத்திரத்தை ஏற்று தன் இயல்பு மீறாத நடிப்பால் உயிரூட்டியிருக்கிறார்.
கணவனின் கஷ்ட நஷ்ட தருணங்களில் தோள் கொடுத்து மனதுக்கு பலமூட்டும் பணியை சரியாகச் செய்திருக்கிறார் விதார்த்தின் மனைவியாக வருகிற ரக்ஷனா.
வங்கியின் உயரதிகாரியாக இருந்து அப்பாவி விவசாயிகளின் நிலத்தைக் குறிவைத்து அபகரிக்கும் சூழ்ச்சிக்காரராக சரவண சுப்பையா கம்பீரமாக வந்து போகிறார்.
மற்றவர்கள் தங்களது பாத்திரங்களின் தன்மையறிந்து நடித்திருக்க, என் ஆர் ரகுநந்தன் இசையில் பாடல்கள் இதம் கூட்டியிருக்கின்றன. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் படத்தை தாங்கிப் பிடித்து தரம் உயர்த்தியிருக்கின்றன.
வலியவர்களை எதிர்க்கும் எளியவன் என்கிற பழகிப்போன கதைக்களத்தை எடுத்துக்கொண்டு, வங்கிகள் மூலமாக விவசாயிகள் எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றப்படலாம் என்பதை எடுத்துக்காட்டி எச்சரிக்கை மணியடித்திருக்கிற மருதம் தமிழ் சினிமாவின் பெருமிதம்!
Rating 4 / 5

