மக்கள் பலரும் சந்திக்கிற கடன் தொல்லை பற்றிய படம்; மர்ம மனிதன், தொடர் கொலைகள், போலீஸ் தேடல் என இறுதிவரை கிரைம் திரில்லர் பாணியில் பயணிக்கிற ‘இறுதி முயற்சி.’
தொழிலில் நஷ்டம், பிள்ளையின் மருத்துவச் செலவு என பிரச்சனைக்குள் சிக்கிய அந்த ஜவுளிக்கடை முதலாளி 80 லட்ச ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறார். குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளும் என்ற முடிவுக்கு வருகிறார். அந்த நேரமாகப் பார்த்து, போலீஸ் தேடிக் கொண்டிருக்கும் சைக்கோ கொலையாளி ஒருவன் அந்த கடனாளியின் வீட்டுக்குள் சென்று பதுங்குகிறான்.
கதையை இப்படி தாறுமாறாகத் துவங்கி, அந்த குடும்பத்தின் தற்கொலை முயற்சி என்னவானது? சைக்கோ அந்த கடன்காரரின் வீட்டுக்கு சென்றது ஏன்? அவனை போலீஸால் பிடிக்க முடிந்ததா? என்பதையெல்லாம் விவரித்து, கிளைமாக்ஸில் அசத்தலான டிவிஸ்டோடு நிறைவு செய்கிறார் இயக்குநர் வெங்கட் ஜனா.
கடனை அடைக்க முதல் முயற்சியாக நண்பர்களிடம் உதவி கேட்டு அணுகி மறுக்கப்பட்டு மன உளைச்சலை சுமப்பதாகட்டும், கடன் கழுத்தை நெரிக்க அந்த கழுத்தை தூக்குக் கயிறுக்கு கொடுக்க முயற்சிப்பதாகட்டும், தான் சாவது மட்டும் தீர்வாகாது என கருதி குடும்பத்தோடு போய்ச் சேர விபரீத முயற்சியில் இறங்குவதாகட்டும் தான் படும் வேதனையை எந்த நேரமும் வியர்த்து வழியும் முகத்தில் முழுமையாக பிரதிபலித்திருக்கிறார் ரஞ்சித்.
அவருக்கு மனைவியாக வருகிற மேகாலி கணவனின் மனக் கஷ்டங்களில் பங்கெடுக்கிற கடமையை கச்சிதமாக செய்திருக்கிறார். ரஞ்சித் _ மேகாலி தம்பதியரின் பிள்ளைகளாக வருகிற மெளனிகா, நீலேஷ் இருவரும் மனதில் பதிகிறார்கள்.
மீட்டர் வட்டிக்கு, ஸ்பீடு வட்டிக்கு என கடன் கொடுத்து திருப்பிக் கொடுக்க முடியாதவர்களை கேவலப்படுத்தி, பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தும் வேலையை அதற்கான உருட்டல் மிரட்டலுடன் செய்திருக்கிறது விட்டல் ராவ், புதுப்பேட்டை சுரேஷ் கூட்டணி.
இன்ஸ்பெக்டராக வருகிற கதிரவனிலிருந்து மற்றவர்கள் கதையின் தேவையுணர்ந்து நடித்திருக்க, விஜய் சேதுபதியின் வாய்ஸ் ஓவர் உற்சாகம் தந்து கதைக்கு முடிவுரை எழுதுகிறது.
ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்டோர் அவரவர் பங்களிப்பில் குறைவைக்கவில்லை.
கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பிச் செலுத்த இயலாதவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால், ரவுடியிஸத்தை கையிலெடுத்தால் சட்டத்தின் உதவியை நாடலாம் என்ற நிலைமையை அரசாங்கம் உருவாக்கி வைத்திருக்கிற காலகட்டத்தில், இந்த கதையின் ஹீரோ அது பற்றி ஒருதடவை கூட யோசிக்காமல் தற்கொலை பற்றியே சிந்திப்பது ஆடியன்ஸுக்கு சலிப்பு தரலாம்.
இப்படி குறிப்பிட்டுச் சொல்ல சில குறைகள் இருந்தாலும், சைக்கோ கொலைகாரன் ஒருவனை கதையில் இழுத்துக் கட்டி கதையை ஓரளவு விறுவிறுப்பாக நகர்த்தியிருப்பதற்காகவும், பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்கான இறுதி முயற்சியாக தற்கொலை முயற்சி அமைந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்தியிருப்பதற்காகவும் படக்குழுவை பாராட்டலாம்.
Rating 2 . 5 / 5


