கிரைம் திரில்லர் வரிசையில் மற்றுமொரு படம்.
அந்த அப்பா தன் மகனைக் காணவில்லை என புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேசனுக்கு போகிறார். அங்கு அவருடைய புகாரை யாரும் மதிக்கத் தயாராக இல்லை. அந்த நேரமாகப் பார்த்து, ஸ்டேசனுக்குள் யாரோ ஒருவர் வைத்த பாம் வெடிப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
நமக்கு பிரச்சனை என்றால் போலீஸ் ஸ்டேசனுக்கு போகலாம். இப்போது போலீஸ் ஸ்டேசனே பிரச்சனையில் சிக்கிக்கொள்ள, கதை சூடுபிடிக்கிறது.
பாம் வைத்தது யார்? எதற்காக வைக்கப்பட்டது? காணாமல் போன மகனுக்கு என்னவானது? என்பதற்கான பதில்கள் கடைசி 20 நிமிடங்களில் கிடைக்கிறது. அதற்கு முன், பாம் வெடிக்காமல் ஸ்டேசனில் உள்ளவர்களை காப்பாற்ற எடுக்கப்படும் முயற்சிகள், ஒரு பாம் வெடித்து ஒருவர் மரணமடைதல், பாம் வைத்த நபர் நீதிபதியை ஸ்டேசனுக்கு வர வைத்து விசாரணை நடத்தச் செய்வது என ஒவ்வொரு காட்சியிலும் பரபரப்புக்கு பஞ்சமில்லை.
காணாமல் போன மகனுக்கு என்னவாகியிருக்கும் என்ற பரிதவிப்பாகட்டும், அதே பரிதவிப்போடு ஸ்டேசனுக்குள் இருக்கும் பாமை செயலிழக்கச் செய்ய எடுத்துக் கொள்ளும் முயற்சியாகட்டும் அருண்பாண்டியனின் பொருத்தமான நடிப்பு,.
மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரியும்போது கதறித் துடிப்பது, இன்ஸ்பெக்டராக இருந்தும் கண்ணெதிரில் நடக்கும் கொடுமைகளைத தடுக்க முடியாத நிலைமைக்கு ஆளாகி அதன் விளைவாக அதிரடியில் இறங்குவது என நட்டி நட்ராஜ் தந்திருக்கும் துடிப்பான நடிப்பு,
சப் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் ஸ்டேசனில் உள்ளவர்களை பாம் வெடிப்பதற்கு முன் பாதுகாப்பாக வெளியேற்றி விட வேண்டும் என போராடுகிற அக்சரா ரெட்டியின் கச்சிதமான நடிப்பு,
அவசரகதியில் நீதிமன்றமாக மாற்றப்பட்ட போலீஸ் ஸ்டேசனில் அமர்ந்து அதிகாரிகளை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து பாம் வைக்கப்பட்டதன் பின்னணியை அலசி ஆராயும் நீதிபதியாக வினோதினி வைத்தியநாதனின் நேர்த்தியான நடிப்பு,
தான் உட்கார்ந்திருக்கும் சேரிலிருந்து எழுந்தால் பாம் வெடிக்கும் என்ற நிலையில் அதற்கேற்ற பயந்து பதறும் நடிப்பு,
அருண் பாண்டியனின் மகனாக வருகிற அதித்யா சிவகுமாரின் இளமைத் துடிப்புமிக்க நடிப்பு,
அவரது காதலியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிற யுவினா பார்த்தவியின் பாசப்பிணைப்பு நிரம்பிய நடிப்பு,
சீரியஸான கதையோட்டத்தில் மிகச்சில நிமிடங்கள் கலகலப்பூட்டும்படியான தங்கதுரையின் பங்களிப்பு… அனைத்துமே கவனம் பெறுகிறது.
குணா பாலசுப்ரமணியனின் பின்னணி இசை, பத்மேஷ் மார்த்தாண்டனின் ஒளிப்பதிவு காட்சிகளை தரமாக்கியிருக்கிறது.
குற்றவாளியை சட்டத்தால் தண்டிக்க முடியாது என்ற நிலையில், பாதிக்கப்பட்டவன் சட்டத்தைக் கையிலெடுத்தால் என்னவாகும் என்கிற பழக்கப்பட்ட கதைக்களத்தை கையிலெடுத்திருக்கும் இயக்குநர் சுப்ரமணியன் ரமேஷ்குமார், படத்தின் இடைவேளை வரையிலான திரைக்கதையில் பரபரப்பின் சதவிகிதத்தை தாறுமாறாக ஏற்றியிருக்கிறார். அதன் பிறகான காட்சிகளில் அந்த பரபரப்பை தக்க வைத்திருந்தால் ‘ரைட்’டுக்கான வரவேற்பு பிரைட்டாக இருந்திருக்கும்!

