காதல் எல்லாவிதமான பைத்தியக்காரத் தனங்களையும் செய்யத் தூண்டும். அந்த வகையில் இதுவரை இல்லாத புதுமையாய், இந்த கதையில் வருகிற காதலர்கள் காதலை எதிர்ப்பவர்களிடமிருந்து தப்பிக்க பாலினம் மாறுகிறார்கள். அப்படி மாறியபின் அவர்களால் திருமணம் செய்து கொள்ள முடிந்ததா, நிம்மதியாக வாழ முடிந்ததா என்பதெல்லாம் கதையின் மீதி…
ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறுகிற காதல் ஜோடியாக தர்ஷன் _ ஷர்மிஷா. காதலர்களாக உற்சாகத்தில் மிதப்பது, காதலுக்கு எதிர்ப்பு தீவிரமானபின் அவஸ்தைகளை அனுபவிப்பது என நகரும் காட்சிகளில் தந்திருப்பது உணர்வுபூர்வமான நடிப்பு என்றால், அவர்களின் பாலினம் மாறிய கெட்டப் ரசிக்க வைக்கிறது.
திருநங்கையொருவரை தன் காமப்பசிக்கு பயன்படுத்திக் கொண்டு பணம் தராமல் தள்ளிவிடுவதிலிருந்து கேடுகெட்ட செயல்களை கெத்தாக செய்திருப்பது இந்த படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜி வி பெருமாள்.
ஹீரோயினின் தந்தையாக ‘புதுப்பேட்டை’ சுரேஷ், தாய்மாமனாக ஜெ மனோஜ் இருவரின் வில்லத்தனம் படத்துக்கு பலம்.
காதலர்கள் தரப்பு வழக்கறிஞராக வருகிற திருநங்கை மிலாவின் எளிமையான நடிப்பு தனித்து தெரிகிறது.
நீதிபதியாக பாய்ஸ் ராஜன், பாலின மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக ஷகிலா, அரசு தரப்பு வழக்கறிஞராக மதுமிதா என மற்றவர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது கச்சிதமான பங்களிப்பு.
டோர்னலா பாஸ்கர், பரணி குமார் கூட்டணியின் ஒளிப்பதிவும், பாரதிராஜாவின் பின்னணி இசையும் நேர்த்தி.
வித்தியாசமான கதையில் உருவாகி, ‘காரணம் எதுவாக இருந்தாலும் பாலினம் மாறுகிற முடிவென்பது தவறான அணுகுமுறை’ என்பதை அழுத்தமாக சொல்லி கவனிக்கத்தக்க படைப்புகளின் வரிசையில் இணைகிற சரீரம், இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமான திரைக்கதையால் பின்னப்பட்டிருந்தால் வசூல் குவித்த படங்களின் வரிசையிலும் சேர்ந்திருக்கும்!

