நாடா? நட்பா? எதற்கு முக்கியத்துவம் தருவது? என்ற மனப் போராட்டத்தில் தவிக்கும் ராணுவ வீரனை சுற்றிச் சுழலும் ‘ராயல் சல்யூட்.’
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில், போரில் ஈடுபட்டிருக்கும் பாகிஸ்தான் ராணுவ வீரன் பக்ருதீனும் இந்திய ராணுவ வீரன் சக்திவேலுவும் சந்தித்துப் பேசி நண்பர்களாகிறார்கள். அந்த பக்ருதீனை உடனடியாக சுட்டுக்கொல்ல இந்திய ராணுவ உயரதிகாரி உத்தரவிடுகிறார். அந்த உத்தரவை மீறினால் சக்திவேல் தேச துரோக குற்றவாளியாவான்; சுட்டுக் கொன்றால் நட்புக்குத் துரோகம் செய்தவனாவான். இப்படி கதையில் பரபரப்பு பற்றிக் கொள்ள, சக்திவேல் என்ன முடுவெடுப்பான் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி கடந்தோடுகிறது திரைக்கதை… அதில், சக்திவேலுவும் பக்ருதீனும் நண்பர்களானது எப்படி என்கிற அழுத்தமான காட்சியும் உண்டு.
சக்திவேலுவாக பிரதீப். உயரதிகாரிகளுக்கு நெஞ்சை நிமிர்த்தி சல்யூட் அடிக்க வேண்டும். எதிரி நாட்டு வீரனாக இருந்தாலும் அவனிடமிருக்கும் மனிதாபிமானத்துக்கு தலை வணங்க வேண்டும். தன்னைக் காப்பாற்றியவனை கொல்ல வேண்டிய கட்டாய சூழ்நிலையில் அதை செய்ய முடியாமல் தவிக்க வேண்டும்; அயோக்கியத்தனமாக நடந்து கொள்ளும் உயரதிகாரியை துப்பாக்கி முன்னிலையில் நிறுத்தி ஆவேசப் பேச்சினால் போட்டுப் பொளக்க வேண்டும்; இடையில் கொஞ்ச நேரம் மனைவியோடு உரையாட வேண்டும். எல்லாவற்றையும் பாஸ்மார்க்குக்கும் கொஞ்சம் குறைவாகத்தான் மதிப்பெண் தர முடியும் என்ற தரத்தில் செய்திருக்கிறார்.
பாகிஸ்தான் ராணுவ வீரனாக சுபாஷ் சிம்பு. எதிரி நாட்டு வீரர்களை சுட்டுக் கொல்கிற வேலையைச் செய்பவராக இருந்தாலும் அதெல்லாம் தவறு என தனக்குள்ளிருக்கும் மனநிலையை இயல்பான முகபாவங்களில் பிரதிபலிப்பதும், சக்திவேலின் உயிரைக் காப்பாற்றும் தருணமும் கவனம் ஈர்க்கிறது.
இந்திய ராணுவத்தின் உயரதிகாரியாக வருகிற அமரன் எம் ஜி ஆர், பதவி உயர்வுக்காக கொலை செய்யவும் தயாரான நபராக எளிமையான வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.
இந்திய ராணுவ வீரர்களில் ஒருவராக வருகிற ஜனனி, அவரது உயரதிகாரி செய்யச் சொன்ன குற்றத்தை செய்ய மறுத்து அவரை சக வீரர்கள் முன் அடையாளம்காட்டி கண்டிப்பது கம்பீரமாக இருக்கிறது.
சக்திவேலின் மனைவியாக மிகச்சில நிமிடங்களே வந்துபோகிற மீனாட்சி, கணவனை போரில் இழந்தால் அது இழப்பல்ல; பெருமை என்று பேசும் வசனம் கவனம் பெறுகிறது.
இன்பா, யுவா யுவராஜ் என மற்றவர்கள் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
ஜெய் கிஷான் இசையில் ஜெய் சிவ சேகர் எழுதியுள்ள பாடல்கள் கதைக்குப் பொருத்தம்தான் என்றாலும் மனதில் இடம்பிடிப்பது சிரமம். பின்னணி இசை பரவாயில்லை ரகம். ஒளிப்பதிவு நேர்த்தி.
தேசப்பற்றைத் தூண்டுகிற விதத்தில் கதைக்களத்தை உருவாக்கி, உலகம் முழுக்க போரில்லா சூழல் உருவாக வேண்டும் என்ற நல்லெண்ணத்தை விதைத்து, நன்றியுணர்வின் ஆழத்தை உணர்த்தியிருக்கிற இந்த படத்தில் கதைக்கேற்ற பிரமாண்டம் இல்லாதது, காட்சிகள் நாடகத்தனமாக நகர்வது பலவீனம்.
பலவீனங்களைப் பொருட்படுத்தாமல் கடந்து வந்தால், இந்த படம் மூலம் படத்தை இயக்கியிருக்கிற ஜெய் சிவ சேகர் சொல்லியிருக்கிற கருத்துக்களை பாராட்டலாம்!
Rating 3 / 5

