தன்னையறியாமல் ஒரு கொலையைச் செய்துவிட்டு, அதிலிருந்து தப்பிக்க இன்னொரு கொலைப்பழியை ஏற்கிறார் இந்த கதையின் ஹீரோ உதயா. கொலைக் குற்றவாளியான அவரை கோர்ட்டுக்கு அழைத்துப்போகும்போது யார் யாரோ அவரை கொன்று தீர்க்க ஸ்கெட்ச் போட்டு நெருங்குகிறார்கள். போலீஸும் அதே ஸ்கெட்ச் போடுகிறது.
அத்தனை பேருமாகச் சேர்ந்து அவரது உயிருக்கு குறிவைக்க காரணம் என்ன? அவர் குற்றவாளியானது எப்படி? அவரது உயிரைப் பறிக்க திட்டமிடுகிறவர்களிடமிருந்து அவர் தப்பிக்க முடிந்ததா இல்லையா? என்ற கேள்விகளுக்கு பதில் தந்து கடந்தோடுகிறது இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ் அமைத்திருக்கும் திரைக்கதை.
ரவுடி ஆசாமி கதாபாத்திரத்துக்கேற்ப தோற்றத்தை மாற்றிக் கொண்டிருக்கும் உதயாவுக்கு நடிப்பில் காதல், சோகம், கோபம் என எல்லா உணர்வுகளுமே சற்றே கூடுதலாய் பொங்கி வழிகிறது.
இந்த பக்கமிருந்து தாக்குதல், அந்த பக்கமிருந்து சதிச் செயல் என சுழன்றடிக்க, எல்லாவற்றையும் சமாளித்து தன் பாதுகாப்பிலிருக்கும் குற்றவாளி உதயாவை கோர்ட்டில் ஒப்படைக்க போராடும் அஜ்மல் தந்திருப்பது தரமான நடிப்பு.
நாயகிக்கு காதல் உணர்வை அளவாக அழகாக வெளிப்படுத்தவும் உணர்ச்சி வசப்படுகிற காட்சிகளை பொருத்தமான நடிப்பால் நிரப்பவும் தெரிந்திருக்கிறது. அந்த கிளைமாக்ஸ் ஷாக் தருகிறது.
யோகிபாபுவுக்கு காட்சிகள் குறைவென்றாலும் தியேட்டரில் சிரிப்புச் சிதறல்களை பார்க்க முடிகிறது.
காவல்துறை அதிகாரியாக பிரபு ஸ்ரீனிவாஸ், அரசியல்வாதிகளாக பவன், தயா பன்னீர்செல்வம், நீதிபதியாக இயக்குநர் பிரபு சாலமன் என மற்றவர்கள் கதையின் தேவைக்கு நடித்து நகர்கிறார்கள்.
பேருந்தில் நடக்கும் சண்டைக் காட்சி படத்திற்கு விறுவிறுப்பு கூட்டியிருக்கிறது. மருதநாயகத்தின் ஒளிப்பதிவு படத்தை மெருகேற்ற, நரேன் பாலகுமாரின் இசையில் பிரியாணி மேக்கிங் பாடல் சுவாரஸ்யம். பின்னணி இசை இன்னும் கொஞ்சம் கதையின் போக்கிற்கு சுறுசுறுப்பு தருவதாக இருந்திருக்கலாம்.
நல்ல மனதுடைய ரவுடி, அவனைக் காப்பாற்ற நினைக்கும் நல்ல போலீஸ், இருவருமாக பயணிக்கும்போது சந்திக்கும் அதிரடியான சம்பவங்களின் தொகுப்பான இந்த அக்யூஸ்ட், திருப்பங்களால் நிரம்பி அட்டகாசமான கிரைம் திரில்லர் அனுபவம் தருகிறது.
Rating 3 / 5
நினைக்கும்

