நீதிமன்ற வளாகத்தில் ஒருவர் தீக்குளித்து இறக்கிறார். அவர் யார், அவருக்கு என்ன பிரச்சனை என்ற எந்தவொரு விவரமும் தெரியாமல் வழக்கறிஞர் ஒருவர் பொது நல வழக்கு போடுகிறார்.
தலை வால் புரியாத அந்த வழக்குக்கான ஆதாரங்களை அவர் சேகரிக்க சேகரிக்க,
தற்கொலை செய்து மரணமடைந்தவர் தன் மகள் காணாமல் போனதை போலீஸில் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது, அந்த மகள் காணாமல் போனது 20 வருடங்கள் முன் என்பது தெரியவருவது, காணாமல் போனவரின் கதி என்னவென்பதை அறிந்து கொள்வது என ஒவ்வொன்றும் தொடர் பார்க்கும் நம்மை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. கதை சூரிய பிரதாப்; இயக்கம் பாலாஜி செல்வராஜ்
வெறும் ‘நோட்டரி பப்ளிக்’காக மட்டுமே இருப்பதால் சிலரது கேலிக்கு ஆளாவதாகட்டும், பொதுநல வழக்கு போடுவதில் காட்டும் ஈடுபாடாகட்டும், நீதிமன்றத்தில் சரியான ஆதாரங்களை கொடுக்க முடியாமல் திணறுவதாகட்டும், தற்கொலை செய்துகொண்டவர் எதிர்பார்த்த நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்று சாதித்துக் காட்டுவதாகட்டும்… ஆத்திரமோ, ஆதங்கமோ, இயலாமையோ, விரக்தியோ அத்தனை உணர்வுகளையும் தேவையான மீட்டரில் காட்டியிருக்கிறார் ‘சித்தப்பு’ சரவணன்.
அவரிடம் ஜூனியராக சேர்கிற நம்ரிதா, கையாளும் வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு நியாயம் கிடைக்க எடுத்துக் கொள்ளும் முயற்சிகளில் தனது துடிப்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
அரசு தரப்பு அட்வகேட்டாக அருள் டி சங்கர் வெளிப்படுத்தும் முகபாவங்களில் ஆளுமையின் சதவிகிதம் அசத்தலாய் தெரிகிறது. சண்முகம், திருச்செல்வம், விஜய்ஸ்ரீ, இனியா ராம் என மற்றவர்கள் கதையின் தன்மை புரிந்து நடித்திருக்கிறார்கள்.
பின்னணி இசையால் விபின் பாஸ்கரும், ஒளிப்பதிவால் எஸ்.கோகுல கிருஷ்ணனும் தொடரின் தரத்தை மேம்படுத்தியிருக்கிறார்கள்.
நிச்சயமாய் வித்தியாசமான கதை, அதற்கேற்ப எந்த எபிசோடுகளிலும் சுறுசுறுப்பு குறையாத திரைக்கதை என உருவாகியிருக்கும் சட்டமும் நீதியும் தருகிற நீதி ‘தாமதமானாலும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்தே தீரும்.’

