இயக்குநர் பாலா 1999-ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து கடந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர். தற்போது அவர் இயக்கி அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ள ‘வணங்கான்’ படத்தின் இசை வெளியீடும், சினிமாவில் பாலாவின் 25 ஆண்டுகளைக் கொண்டாடும் விழாவும் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடந்தது.
விழாவில் இயக்குநர்கள் சீமான், மிஷ்கின், சமுத்திரக்கனி, ஏ.எல். விஜய், லிங்குசாமி, ராம், மணிரத்னம், கே. பாக்கியராஜ், மாரி செல்வராஜ், விக்ரமன், ஆர். வி. உதயகுமார், கே. எஸ். அதியமான், வினோத் (கொட்டுக்காளி), பிருந்தா சாரதி, வசந்த பாலன், சீனுராமசாமி, கஸ்தூரி ராஜா, பேரரசு, பொன்ராம், V.Z. துரை, சிங்கம் புலி, சரண், அரவிந்த் ராஜ், எழில், கோபிநாத் (ஜீவி), பி. எஸ் வினோத் ராஜ், பாரி இளவழகன், ஜி. ஆர். ஆதித்யா, நாகேந்திரன், சுரேஷ், அஜயன் பாலா, கேபிள் சங்கர், அறிவழகன் (ஈரம்), சுசீந்திரன், மீரா கதிரவன், மூர்த்தி, நித்திலன், நம்பிராஜன்,
நடிகர்கள் சிவக்குமார், விஜயகுமார், சூர்யா, சிவகார்த்திகேயன், ஜி. வி பிரகாஷ், கருணாஸ், தம்பி ராமையா, மன்சூரலிகான், வெற்றி, பிரஜின், பிரதீப், சிவாஜி, அரீஷ் குமார், ஆர்.கே சுரேஷ், கூல் சுரேஷ், சூப்பர் குட் சுப்பிரமணி, வீரா, அப்புக்குட்டி, ஏ.எல். உதயா, ஆர். கே.கிரண் ( ஆர்ட் டைரக்டர்),
தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், தனஞ்செயன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, P L தேனப்பன், சித்ரா லஷ்மண், வெற்றிக்குமரன்,
நடிகைகள் கருத்தம்மா ராஜஸ்ரீ, சாயா தேவி, வரலஷ்மி, காயத்ரி ரகுராம், அபிதா, வேதிகா, ரித்தா, வசுந்தரா, மதுமிதா, பிரிகிடா, ஜுலி, ஸ்வேதா டோரத்தி உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இந்த விழாவை அர்ச்சனா மிகச்சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
.
நிகழ்ச்சியின் துவக்கத்தில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படங்களின் ஹிட் பாடல்களைப் பாடி அசத்தினார்கள். அடுத்து வந்த தப்பாட்டம் அரங்கை அதிரவைத்து அடங்கியது.
நிகழ்வின் இடையே தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் இயக்குநர் பாலாவுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தனர்.
பொன்னாடையுடன் மேடையேற்றி தயாரிப்பாளர்கள் தாணு, தியாகராஜன், கதிரேசன், சிவா, தனஞ்ஜெயன் போன்றவர்கள் பாலாவின் இயக்கத்தைப் பற்றியும் அவரது கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டிப் பேசினார்கள்.
அடுத்து பாலாவுடன் கதை விவாதங்களில் ஈடுபட்ட பவா செல்லதுரை, சிங்கம்புலி, அஜயன் பாலா, யூகி சேது ஆகியோரை இயக்குநர் மிஷ்கின் சுவாரசியமான கேள்விகளுடன் பேட்டி எடுத்தார்.
விழா தொடங்கிய சில நிமிடங்களில் பரபரப்பாக அரங்கிற்குள் நுழைந்தார்கள் சிவகுமாரும் சூர்யாவும். முதலில் சூர்யா பேச அழைக்கப்பட்டார். அப்போது நடிகர் சிவகுமார், இயக்குநர் பாலாவுக்கு தங்கச் செயினை அணிவித்து மகிழ்ந்தார். இயக்குநர் பாலாவின் மீதான பேரன்பையும், நன்றியையும் தன் பேச்சில் சூர்யா நெகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தினார்.
நிகழ்வில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசும்போது, “சேது படம் வரும்போது எனக்கு 14 வயது. அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி எனக்கு ரொம்பவே பாதிப்பை கொடுத்தது. அவரது படங்களை எல்லாம் திரையரங்கில் பார்த்தது இப்போதும் நினைத்துப் பார்க்கிறேன். அமரன் படம் இந்த தீபாவளிக்கு வெளியானபோது படத்தின் க்ளைமாக்ஸ் எதிர்மறை முடிவாக இருக்கிறதே என்று எல்லோரும் சொன்னார்கள். ஆனால் பாலா அண்ணனின் பிதாமகன் படம் இதேபோல தீபாவளிக்கு எதிர்மறை முடிவுடன் வந்து ஹிட் அடித்தது என்றும் சொன்னார்கள்.. அதே போல தான் நடந்தது.
அவருடைய அவன் இவன் பட விழாவை நான் தான் தொகுத்து வழங்கினேன். இன்றும் அது என் மனதில் என் நினைவிருக்கிறது. அருண் விஜய் அண்ணன் தான் இந்த விழாவிற்கு நீ கட்டாயம் வர வேண்டும் தம்பி என கூப்பிட்டார். எப்போதுமே விட்டுக் கொடுக்காமல் முயற்சி செய்வதுதான் அவருடைய உண்மையான வெற்றியாக நான் பார்க்கிறேன். ஒரு தம்பியாக அவரது இந்த படத்தின் வெற்றிக்கு நான் வாழ்த்துகிறேன்” என்றார்.

