ஒரு கொலை, அதன் பின்னணியை விசாரிக்கும்போது அடுத்தடுத்த கொலைகள் என பரபரப்பும் விறுவிறுப்புமாக, முழுக்க புதுமுகங்கள் பங்களிப்போடு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் விருந்து தரும் ‘சைலண்ட்.’
கதை ஒரு பெண் கொலையில் ஆரம்பமாகிறது. அந்தக் கொலையை போலீஸ் விசாரிக்க ஆரம்பிக்கும் போது, மேலும் பல கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது. அதன் பின்னணியில் புவனேஸ்வரி என்ற பெண் இருப்பதாக நம்புகிறார் போலீஸ். ஆனால், அது புவனேஷ் எனும் ஆண் என்பது தெரிய வருகிறது. அவனைப் போலீஸ் பிடித்ததா? அந்த கொலைகளுக்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன? என்பது கதைக்களம்.
சமூகத்தில் ஒரு பாலினம் கைவிடப்பட்டிருக்கிறதா? என்ன தான் நவீன சமூகமாக மாறினாலும், திருநங்கைகளை நாம் பார்க்கும் பார்வை பெரிதாக மாறவில்லை அதை அழுத்தமாக பேசும் படைப்பாக சைலண்ட் படம் வந்திருப்பது அழகு.
இயக்குநர் கணேஷா பாண்டி மிக அழுத்தமான களத்தை தேர்ந்தெடுத்து சுவாரஸ்யம் குறையாமல் படத்தை தந்துள்ளார். முதல் பட சிக்கல்கள் குறைகள் தாண்டி ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை படம் தருகிறது.
ஒரு கொலை அதை தொடர்ந்து விசாரணை என அடுத்தடுத்த கொலை, என விரியும் திரைக்கதையை அறிமுகப்படத்திலேயே அட்டகாசமாக எழுதி அசத்தியுள்ளார் சமய முரளி. போலீஸ் கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை தந்துள்ளார்.
ஆணாகவும் பெண்ணாகவும் புவனேஸ்வரி எனும் புவனேஸ்வரன் கதாபாத்திரத்தில் இயக்குநர் கணேஷா பாண்டியே களமாடியிருக்கிறார். இயக்கத்தைவிட அவர் நடிப்பு கலக்கல்.
மதியழகன் பட நாயகி ஆரத்யா, தொப்பி படத்தின் நாயகன் முரளி ராதாகிருஷ்ணன், பிக்பாஸ் நமீதா, மாரிமுத்து என எல்லோரும் கதாப்பாத்திரத்திற்கான உழைப்பத் தந்துள்ளார்கள்.
குறைந்த படெஜெட் என்றாலும் சேயோன் முரளி ஒளிப்பதிவு படத்தை ஈடு செய்கிறது. எடிட்டிங் ஓகே.
இசையமைப்பாளர் சமயமுரளிக்கு முதல் படமாம். ஆனால் அப்படி தெரியவில்லை, படத்தின் மூன்று பாடல்களும் தேர்ந்த இசையமைப்பாளர் இசையமைத்தது போலிருக்கிறது; ரசிக்கும்படி உள்ளது. பின்னணி இசையும் அட்டகாசம்.
கதை திரைக்கதையில் எந்த ஓட்டையும் இல்லை. ஆனால் படத்தின் பட்ஜெட் மற்றும் உருவாக்கத்தில் ஆரம்ப கட்ட தடுமாற்றங்கள் தெரிகிறது. அதை சரி செய்து மெருகேற்றியிருக்கலாம்.
இந்த படம் தமிழ் சினிமாவுக்கு புதிய திரில்லராக இல்லையென்றாலும் ரசிகர்கள் ஒரு முறை பார்த்து ரசிக்கும்படியான, ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி தரும்படியான படைப்பு என்பதில் சந்தேகமில்லை.

