சமூகத்திற்கு பாடம் நடத்துகிற படங்களின் வரிசையில் மற்றுமொரு படம்.
அந்த கிராமத்தில் சாதிவெறி பிடித்த, ரவுடித்தனம் செய்துகொண்டிருக்கிற ஒருவருக்கும் தன்னிடம் பாடம் கற்கும் மாணவர்களிடமும் ஊர் மக்களிடமும் சாதிப் பாகுபாடு பார்ப்பது தவறு என்பதை வலியுறுத்துவதோடு ஏகப்பட்ட நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்தும் ஆசிரியர் ஒருவருக்கும் உருவாகும் மோதலும் அதன் விளைவுகளுமாய் பயணிக்கிறது ‘யாரு போட்ட கோடு.’
தனக்கு எதிராக இயங்கும் ஆசிரியரை ஊரைவிட்டு துரத்த திட்டமிடுபவருக்கு வன்முறை பலம் என்றால் ஆசிரியர் எதிலும் மென்முறையை கடைப்பிடிப்பவர். வன்முறையும் மென்முறையும் மோதுவதில் வெற்றி யாருக்கு என்பது கிளைமாக்ஸ்…
மதுபானக் கடையை மூட மாணவர்களைத் திரட்டி போராடுவதாகட்டும் தன் மாணவர்களும் மக்களும் தவறான விஷயங்களை செய்கிறபோது கண்டிப்பதாகட்டும், தன்னை எதிரியாக நினைப்பவரின் மிரட்டல்களை சமாளிப்பதாகட்டும் எல்லாவற்றையும் புன்னகை மாறாத முகத்துடன் செய்திருக்கிறார் ஆசிரியராக வருகிற எஸ் எம் பிரபாகரன். கதாநாயகியுடன் நெருக்கமாக நடிக்கிற காட்சிகளில் அதற்கேற்ற உணர்வுகளை குறை சொல்லமுடியாத அளவில் வெளிப்படுத்துகிறார்.
அவருக்கு ஜோடியாக வருகிற மேகாலி மீனாட்சிக்கு உணர்வுபூர்வமாக நடிக்கிற வாய்ப்பும், ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் கவர்ச்சி காட்டுகிற வாய்ப்பும் கிடைத்திருக்கிறது. இரண்டையும் சரியாக செய்திருக்கிறார்.
தான் நினைப்பதை செய்ய வேண்டும்; அதற்கு தடையாக யார் வந்தாலும் ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படியொரு கொடூர மனிதராக மிரட்டலான வில்லத்தனத்தை நடிப்பில் கொண்டு வந்திருக்கிறார் இந்த படத்தை இயக்கியிருக்கிற லெனின் வடமலை.
அப்பாவின் எண்ணங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் எதிரான மனநிலையோடு செயல்படுகிற கேரக்டரில் தன்னால் முடிந்தளவு அலட்டலாக நடித்திருக்கிறார் லெனின் வடமலையின் மகனான வருகிற சிறுவன் துஹின் சேகுவேரா. படத்தில் மட்டுமல்ல; நிஜத்திலும் அந்த சிறுவனின் தந்தை லெனின் வடமலைதான்.
காதல் பாட்டு, முதலிரவுப் பாட்டு, குத்துப்பாட்டு, கருத்துள்ள பாட்டு என லெனின் வடமலை வெரைட்டியாக எழுதியுள்ள பாடல்களுக்கு செளந்தர்யனும் ஜெய்குமாரும் உற்சாகம் பொங்க இசையமைத்திருக்க, ஒளிப்பதிவாளர் ஜான்ஸ் வி.ஜெரின் மலை, அருவி என காட்சிகளுக்கு அழகூட்டும் இடங்களை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார்.
காட்சிகளை கமர்சியல் அம்சங்களுடன் அமைத்து அதன் மூலம் மனிதர்களுக்குள் சாதிப் பாகுபாடு பார்ப்பது தவறு, உணவுப் பழக்கத்தை வைத்து மனிதர்களை தரம்பிரிப்பது தவறு, படிக்கிற வயதில் காதல் தவறு என ஏராளமான கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கும் இந்த படம் மக்களுக்கான பாடமாக தரம் உயர்கிறது.

