தங்கள் விருப்பத்தை மற்றவர்கள் மீது திணிக்கிற, மற்றவர்களின் உணர்வு புரியாமல் நடந்துகொள்கிற மனிதர்கள் எக்கச்சக்கம். அவர்களில் ஒருசிலரைச் சுற்றிச் சுழல்கிற கதை.
மனைவி தன்னை தொடவில்லை என்ற வருத்தத்திலும் கோபத்திலும் இருக்கும் ஆண்; கணவன் குடிபோதையில் தன்னை தொடுவது பிடிக்காமல் மன உளைச்சலில் நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் பெண். இருவரும் சந்திக்கிற சந்தர்ப்பங்களும் தங்களுக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எந்த சுகம் கிடைக்கவில்லையோ அதை அனுபவிக்கிற வாய்ப்பும் அமைகிறது.
‘அங்கு கிடைக்க வேண்டியது கிடைக்கவில்லை; அது இங்கு கிடைக்கிறது; அதை அனுபவிப்பது தவறா?’ என்ன என்பது இருவரின் எண்ணம். அவரவர் செய்யும் தவறுக்கு அவரவர் பக்கம் நியாயம் இருக்கவே செய்யும். அதேபோல் அவர்களின் தவறான உறவு அவர்களைப் பொறுத்தவரை சரியானது; நியாயமானது.
இப்படி துவங்கும் கதை அந்த உறவால் வரக்கூடிய பிரச்சனைகள், அதனால் அவர்களுக்கு ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்கள் என வேகமெடுக்கிறது…
ஆறு குழந்தைகள் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று சொல்லி, அதற்கு சம்மதம் தெரிவித்த பெண்ணை கல்யாணம் செய்து கொண்டவராக, ‘ஒன்றே போதும்; இரண்டாவது குழந்தையே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்ட மனைவியிடம் மல்லுக்கட்டுபவராக, மனைவியிடம் இனி எந்த சந்தோஷமும் கிடைக்காது என்பது தெரிந்ததும் அந்த சந்தர்ப்பத்தில் தன் கண்ணில் சிக்கிய பெண்ணுடன் ஜாலியாக பொழுதைக் கழிப்பவராக சுற்றிச்சுழல்கிறார் கதைநாயகன் பால்ராஜ். படத்தை தயாரித்து இயக்கியிருப்பவரும் அவரே. தோற்றம் கரடுமுரடாக அழுக்கேறியது போலிருந்தாலும் எந்த கெட்டப் பழக்கங்களும் இல்லாதவராக, உழைத்துச் சம்பாதிப்பவராக தான் உருவாக்கிய கேரக்டருக்கு தன்னால் இயுன்றளவில் உயிரூட்டியிருக்கிறார். கள்ளக்காதல் ரொமான்ஸில் புகுந்து விளையாடுகிறார்.
ஆறு குழந்தை பெற்றுக்கொடு என்று வற்புறுத்தினால் இந்தக் காலத்தில் எந்த பெண்ணும் ஒத்துக்கொள்ள மாட்டாள். பால்ராஜின் மனைவியாக வருகிற காயத்ரி ரெமாவும் ஒத்துக்கொள்ள மறுக்கிறார். அதனால் கணவனைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாக, அந்த பிரிவு தரும் மன உளைச்சலை தன் நடிப்பில் சரியான அளவில் பிரதிபலிக்கிறார்.
கணவன் குடிகாரனாக இருப்பதால் அவனை வெறுத்து, மனைவியைப் பிரிந்து வாழ்கிற பால்ராஜுடன் இணைந்து மனதளவிலும் உடலளவிலும் உற்சாகமடைகிறவராக சுவேதா ஸ்ரீ. அழகாலும் கவர்ச்சியாலும் போதுமான நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார்.
ஓரு பெண் தனியாக இருந்தால் ஆண் சமூகம் அவளை எப்படியெல்லாம் அணுகும் என்பது தெரிந்த கதை. இந்த கதையின் இரண்டாவது நாயகியான ஸ்வேதா கணவனை இழந்து தனிமையில் இருக்கும் சூழ்நிலை. அதை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கிற காவல்துறை உயரதிகாரியாக ரவி மரியா. ஆரம்பத்தில் நியாயமான முறையில் ஸ்வேதாவை அணுகும் அவர், பின்னர் அராஜக ரூட்டைப் பிடிக்கிறார். நடிப்பில் வில்லத்தனத்தில் வெளிப்பாடு ரசிக்கும்படி இருக்க, அதன்மூலம் போலீஸ் அதிகாரிகள் நினைத்தால் எந்த லெவலுக்கும் இறங்குவார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார். அம்பானி சங்கர், பசங்க சிவக்குமார் உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு கச்சிதம்.
விஜய் பிரபுவின் இசையில் பாடல்கள் பரவாயில்லை என்ற உணர்வைத் தர, பின்னணி இசையும், உதயனின் ஒளிப்பதிவும் காட்சிகளின் தன்மை மாறாமலிருக்க உதவியிருக்கின்றன.
‘மனிதர்கள் தவறுகள் செய்ய, குற்றச் செயல்களில் ஈடுபட சந்தர்ப்ப சூழ்நிலைகளே காரணமாக அமைகின்றன’ என்பதை எளிமையான கதையில் எடுத்துச் சொல்லியிருக்கும் இந்த படத்தின் கிளைமாக்ஸ், ‘நாளைக்கு என்ன வேணா நடக்கட்டும்; இன்னைக்கு நாம நமக்காக வாழ்வோம்’ என்று கருத்து சொல்கிறது.
Rating 3 / 5

