ஒரு இளம்பெண் மீது ஒரு முதியவர் கோடிக்கணக்கான சொத்தை வில் (உயில்) எழுதி வைத்துவிட்டு இறந்துபோகிறார். ஒரு பெண் அந்த சொத்தைப் பெற நீதிமன்றத்தை அணுகுகிறார். அவர் போலியானவர் என்பதை தெரிந்துகொள்ளும் நீதிமன்றம் உண்மையில் அந்த சொத்து யாருக்கானது என்பதை கண்டறிய காவல்துறை அதிகாரி ஒருவரை நியமிக்கிறது. கதை இங்கிருந்து சூடுபிடிக்க,
அவர் அந்த பெண்ணை எப்படி கண்டுபிடிக்கிறார், அந்த பெண் யார், அவருக்கும் அவருக்கு உயில் எழுதி வைத்தவருக்கும் என்ன சம்பந்தம் என்பதையெல்லாம் பரபரப்பான திரைக்கதையாக்கி படத்தை இயக்கியிருக்கிறார் வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமுள்ள சிவராமன்.
கதையின் நாயகியாக அலேக்யா. தன் தந்தை செய்யாத தவறுக்கு தண்டனை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உருவாக அதிலிருந்து அவரை மீட்பதற்காக பணக்கார முதியவரின் தொடர்பு எல்லைக்குள் போகும்போது வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பால் மனம் கலங்கச் செய்கிறார். மற்ற காட்சிகளிலும் தேர்ந்த நடிப்பை பிரதிபலித்திருக்கிறார்.
நீதிபதியாக வரும் சோனியா அகர்வால் வழக்கின் உண்மைத் தன்மையை அலசி ஆராய்ந்து விசாரிக்கும் விதம் கம்பீரம்.
உயிலுக்கு உரிமையுள்ள உண்மையான நபரைக் கண்டுபிடிப்பதில் வேகமும் விவேகமும் காட்டி கவனம் பெறுகிறார் விக்ராந்த்.
முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் பதம் வேணுகுமார், இள வயது பெண்ணுடன் தொடர்பில் இருக்கும்போதே ஆடியன்ஸுக்கு வெறுப்பு வந்திருக்க வேண்டும். அப்படி வராதபடி காட்சிகள் அமைந்திருக்க அந்த பெண்ணுக்கு செய்த செயலுக்கு பரிகாரமாக உயில் எழுதி வைப்பதன் மூலம் உயர்கிறது அவரது கதாபாத்திரம். அவரது நடிப்பும் அசத்தல்.
கதாநாயகியின் தந்தையாக வருகிற பிர்லா போஸிலிருந்து மற்றவர்களின் நடிப்பு இயல்பாகவும்,
சோனியா அகர்வாலின் தம்பி செளரப் தந்திருக்கும் பின்னணி இசை, பாடல்கள் எளிமையாக வும் இருக்கின்றன.
ஒரு பக்கம் குழந்தையின்மை பிரச்சனையால் சிகிச்சை, ஆன்மிக பரிகாரம் அது இதுவென மக்கள் மனம் நொந்து கொண்டிருக்க இன்னொரு பக்கம் எண்ணிக்கையில் அடக்க முடியாத அளவுக்கு கருக்கலைப்பு நடந்தது கொண்டிருக்கிறது. இரண்டையும் நினைத்துப் பார்க்கும்படி அமைந்த உணர்வுபூர்வமான கதையாலும், விறுவிறுப்பான திரைக்கதையாலும் வில்லின் தரம் கூடியிருக்கிறது!
Rating 3 / 5 

