அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வருகிறது; அது குடும்பப் பகையாக மாறுகிறது; காலப்போக்கில் ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்பது போல் உற்சாகம் திரும்புகிறது. பல படங்களில் பார்த்துப் பழகிய அதே குடும்பக் கதை…
அந்த குடும்பத்தின் இரண்டாவது மருமகள், தன் மாமியார் தன்னை தாழ்வாகவும் மூத்த மருமகளை உயர்வாகவும் நினைப்பதாக கருதுகிறாள். அந்த நினைப்பால், மாமியார் மருமகள் சண்டை உருவாகி, ஒரு கட்டத்தில் மாமியார் அனாதையாக வீட்டை விட்டு வெளியேறும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது. பஞ்சாயத்து கூடுதல், சொத்து பிரித்தல் அதுஇதுவென அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருக்கிற அந்த சிலபல விஷயங்கள் நடக்கிறது.
இதுபோன்ற குடும்பக் கதைகளின் கிளைமாக்ஸ், பிரிந்தவர்கள் சேர்வதாகத்தான் இருக்கும். இந்த படத்திலும் அதுவே நடக்கிறது. இயக்கம் நாகராஜ் கருப்பையா
குடும்பத்தில் மூத்தவராக வருகிற வேல ராமமூர்த்திக்கு பாசக்காரர், ரோசக்காரர், வீம்புக்காரர், நியாயஸ்தர் என கலந்து கட்டி நடிக்க வேண்டிய வேலை. வழக்கபோல் நெஞ்சு நிமிர்த்திய நடையோடும், பார்வையில் கம்பீரத்தோடும் தனது பாத்திரத்தை பலமாக்கியிருக்கிறார்.
தம்பியாக வருகிற மாரிமுத்து நல்லது கெட்டதை யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்டு நிம்மதியிழக்கிற பாத்திரத்தில் தேர்ந்த நடிப்பை பங்களிக்க,
கதாநாயகனான வருகிற சுரேஷ் நந்தா சொந்த பந்தங்கள் விட்டுப் போகக்கூடாது என்ற நல்லெண்ணம் கொண்ட மனிதனாக, அத்தை மகளை காதலிப்பவராக எளிமையான நடிப்பை தந்துபோக ,
அத்தை மகளாக வருகிற நந்தனாவின் களையான முகமும் காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதமும் கவனம் ஈர்க்கிறது.
குடும்பத்தில் குழப்பம் விளைவிக்கிற செந்தி, காட்சிக்கு காட்சி அழுது அரற்றுவதை அலட்டலாக செய்கிற தீபா ஷங்கர் என நடிகர், நடிகைகள் ஏராளம் தாராளம். எல்லோருக்குமே முக்கியத்துவம் தரும்படி எழுதப்பட்டிருக்கிறது திரைக்கதை.
காட்சிகளுக்குப் பொருத்தமான பின்னணி இசை, கதையோடு பொருந்துகிற பாடல்களுக்கு இதம் தரும் இசை… தீபன் சக்ரவர்த்தியின் கீ போர்டு குறை வைக்கவில்லை.
பந்த பாசம், சொந்த பந்தம், திருவிழா, கிடா வெட்டு என மண்வாசனை நிரம்பிய கதைக்களத்தை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறது எம் சீனிவாசனின் கேமரா.
கதைக்களத்தில் புதுமையில்லாதது, படம் நெடுக யாரேனும் ஒருவர் நீள நீளமாக வசனம் பேசி அழுது கொண்டேயிருப்பது அயர்ச்சியை உருவாக்குகிறது.
உருவாக்கத்தில் குறைகள் இருந்தாலும், சொல்ல வந்த கருத்தில் கனம் குறையவில்லை!

