இந்த கதையின் ஹீரோ நியாயமான காரணத்துக்காக ஊரில் பலரிடமும் லட்சக்கணக்கில் கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்கிற அளவுக்கு சூழ்நிலையை மோசமாக்கிக் கொண்டிருக்கிறான். ஒரு கட்டத்தில், கடன் பிரச்சனைகளைச் சமாளிக்க குறுக்கு வழியில் இறங்குகிறான்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனுசனைக் கடித்த கதையாக பல இடங்களில் பிராடுத்தனம் செய்த அவன், தனது காதலியிடமிருந்தும் 10 லட்சத்தை தட்டித்தூக்க திட்டமிடுகிறான்.
அந்த திட்டம் போலீஸ் வேலையில் சேரவிருக்கும் காதலிக்கு தெரிந்து விட, காதலியின் அப்பா ஊரறிந்த கொலைகார ரவுடியாக இருக்க ஹீரோவின் நிலைமை என்னவாகிறது என்பது மீதிக் கதை…
விதவிதமான திருட்டுத்தனங்களாலும், அதற்கு போலீஸையே பாதுகாப்பாக வைத்துக் கொள்வதாலும் ரசிக்க வைக்கிற ஸ்ரீதேவா, தாதா ரேஞ்சிலிருக்கிற காதலியின் அப்பாவை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கிற ஹீரோயிஸக் காட்சிகளில் அலட்டிக் கொள்ளாமல் நடித்து கவனம் பெறுகிறார்.
போலீஸ் பணியில் சேர்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நாயகி, ஒரு திருடனிடம் ஏமாற தயாராக இருப்பதை ஏற்க முடியவில்லை என்றாலும் கேரக்டரை ஏற்றிருக்கிற நிவேதாவின் நிவேதாவின் நடிப்பில் குறையில்லை.
வில்லனாக வேல ராமமூர்த்தி வழக்கமான கெத்து காட்டுகிறார். மற்றவர்களின் நடிப்பும் நிறைவு.
பரணி இசையில் பாடல்கள் உற்சாகம் தர பின்னணி இசையும், ஆர் என் சிவகுமாரின் ஒளிப்பதிவும் கதைக்களத்தின் பலமாகியிருக்கிறது.
நல்லவன் ஒருவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் திருட்டு அதுஇதுவென குற்றச் செயல்களில் ஈடுபடுகிற கதையை காமெடி கலாட்டாக்கள் கலந்துகட்டிய கமர்சியல் படைப்பாக இயக்கியிருக்கிறார் வேல் குமரேசன். அதிக எதிர்பார்ப்பின்றி சென்றால் ஜாலியாக சிரித்து ரசித்து திரும்பலாம்.
Rating 3 / 5

