சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடித்துள்ள ‘வெள்ளகுதிர’ இந்த மாத இறுதியில் வெளியாகவிருக்கிறது. முன்னதாக கடந்த நவம்பர் 8 அன்று இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
நடிகர் விதார்த், இயக்குநர்கள் பாக்யராஜ், ஆர் வி உதயகுமார், ஆர்கே செல்வமணி, பேரரசு, அஜயன் பாலா, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜெயபிரகாஷம், டி.சிவா, குகன் உட்ப்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பேசிய நடிகர் விதார்த், ”வெள்ள குதிர யை தாண்டி இந்த படத்தின் கதாநாயகனான ஓரிக்கும் எனக்கும் உள்ள நட்பு முறையை பற்றி பேசலாம்னு இருக்கேன்.. பரட்டை என்கிற அழகுசுந்தரம் படத்தில் இருந்து எனக்கு ஓரி அறிமுகம் கூத்துப்பட்டறை நண்பர்களை தாண்டி வெளியில் எனக்கு நண்பர்கள் கிடையாது அப்படி வெளியில் இருக்கும் ஒரே நண்பர் ஓரிதான்.. அவன் எனக்கு முக்கியமான நண்பன் அவன் வீட்டிற்கு போய் வெளியில் வந்த நேரத்தில் எனக்கு மைனா படம் கிடைத்தது. மைனா படம் போல் இந்த படமும் சிரமப்பட்டு எடுக்கப்பட்டிருக்கு” என்றார்.
நடிகை அபிராமி போஸ் ”வெள்ள குதிர எனக்கு முதல் தமிழ் படம் மலையாளம் மராட்டி ஹிந்தி என பல மொழிகளில் நடித்திருந்தாலும், வெள்ள குதிர எனக்கு மிகவும் முக்கியமான படம். தனித்தன்மை வாய்ந்த வாழ்வியல் கதையாக இருந்ததாலும், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்ததாலும் ஒற்றுக் கொண்டேன். குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்றார்.
இசையமைப்பாளர் பரத் ஆசீவகன் ”மூன்று தலைமுறைக்கான இசை குடும்பம் எங்களுடையது.. வெள்ளகுதிர படத்தில் மண்வாசனைகேற்ப மண் மணம் மாறாமல், வரிகளுக்கு ஏற்ப இசையமைத்துள்ளேன்” என்றார்.
இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் ”எங்கள் ஊருக்கும் மேல் இருக்கும் மலைப்பகுதியில் ரோடு இல்லாமல் ஜனங்கள் படும் கஷ்டத்தை வைத்து ஒரு படம் பண்ணு என்று தயாரிப்பாளரும் நடிகருமான ஹரிஷ் ஓரி கேட்கையில், அங்கு ஒரு மாதம் தங்கி அவர்கள் படும்பாட்டை பார்த்து படத்தை நான் இயக்கி இருக்கிறேன். வெள்ளகுதிர படத்தை பொறுத்தவரையில் இந்த கதை தான் என்னை இயக்குனராக தேர்ந்தெடுத்தது. முன்னோர்கள் பற்றிய கதையாக இதை எடுத்து இருக்கிறேன் உங்கள் ஆசியோடு இந்த படம் வெற்றி பெறும் என்று நம்புகிறேன்” என்றார்.
திரு குகன் ”வெள்ள குதிரை படத்தில் இருக்கும் புது தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவறையும் வரவேற்கிறேன். வெள்ள குதிர படத்தை பொருத்தவரையில் அது பெற்றிருக்கும் விருதுகள் அனைத்து தேசத்திலும் ஒருமித்த கருத்தை காண்பிக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் தனக்கு என்ன வேண்டுமோ அதை தானாக எடுத்துக் கொள்கிறது என்பதை நான் நம்புகிறவன். அந்த மாதிரியான ஒரு நல்ல திரைப்படம் தான் வெள்ளகுதிர. வணிகத்தை தாண்டி ஒரு நல்ல திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெருமைப்படுகிறோம்” என்றார்.
இயக்குநர் பாக்யராஜ் ”வெள்ள குதிர படத்தின் நாயகன் ஹரிஷ் ஒரியை பார்க்கையில் நடிப்பதற்காகவே ஊரை விட்டு வந்து 13 வருடமாக கூத்துப்பட்டறை கலைஞனாக நடித்து அனுபவம் பெற்று, சிரமப்பட்டு.. இன்று இந்த வெள்ளகுதிர மூலம் நாயகனாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவரைப் பற்றி அவருடைய நண்பர் நடிகர் விதார்த் அழகாக பேசி இருந்தார்.
நடைபாதை இல்லாத மலை உச்சியில் 13 கிலோமீட்டர், 5 முறை மலை ஏரி படப்பிடிப்பு நடத்துவது என்பது லேசான காரியம் இல்லை. அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து 48 நாட்கள் அங்கு தங்கியிருந்து படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார்கள்
இயக்குனர் சரண்ராஜ் செந்தில்குமார் பேச்சில் படத்தின் மேல் அவர் வைத்திருந்த நம்பிக்கை தெரிந்தது. ஓரி அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்” என்றார்.

