சூரியன் சுறுசுறுப்பாக சுட்டெரிக்கத் துவங்கியிருக்கிற, கேன் வாட்டருக்கான டிமாண்ட் அதிகரித்துக் கொண்டிருக்கிற காலகட்டம் இது. இந்த தருணத்தில், கேன் வாட்டர் பிஸினஸில் ஈடுபடுகிறவர்களின் மத்தியில் நடக்கும் போட்டி பொறாமைகளை மையப்படுத்தி கதையாக வந்திருக்கிற ‘வருணன்.’
ஆண்டவர், ஜான் இருவரும் வடசென்னையில் மக்களுக்கு கேன் வாட்டர் சப்ளை செய்கிறார்கள். இருவருக்கும் இடையில் போட்டி இருந்தாலும் பெரியளவில் சிக்கல்களை உருவாக்கிக் கொள்ளாமல் தொழிலில் கவனம் செலுத்துகிறார்கள். ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் பகை உருவாகிறது.
அது எப்படி உருவாகிறது? உருவாக்கியது யார்? பகையால் ஏற்படுகிற விளைவுகள் என்னென்ன என்பது மீதிக் கதை.
தொழில் போட்டியாளர்களில் ஆண்டவராக ராதாரவி, ஜானாக சரண்ராஜ் இருவருக்கும் கெத்தான பாத்திரங்கள். அதற்கேற்ற கம்பீரம் அவர்களின் நடிப்பில் இருக்கிறது.
துஷ்யந்த் ஜெயபிரகாஷும், பிரியதர்ஷனும் ராதாரவியிடம் வேலை செய்பவர்களாக படம் முழுக்க சுறுசுறுப்பாக வலம் வருகிறார்கள்.
துஷ்யந்தின் காதலியாக வருகிற கேப்ரில்லா பள்ளி மாணவி போலிருக்கிறார். படம் எடுத்து பல வருடங்கள் கடந்திருக்கும் போல.
சரண்ராஜின் மனைவியாக வருகிற மகேஸ்வரியின் நடிப்பு மிரட்டல் ரகம்.
போலீஸாக வருகிற ஜீவா ரவி உள்ளிட்ட மற்றவர்களின் நடிப்பு, போபோ சசியின் பின்னணி இசை, ஸ்ரீராம் சந்தோஷின் ஒளிப்பதிவு, பத்துவின் கலை இயக்கம் அனைத்தும் இணைந்து கதைக்களத்தை தாங்கியிருக்கின்றன.
படத்தின் டிரெய்லரை பார்த்தபோது, இந்த படம் குடிதண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு மக்கள் தள்ளப்பட்டதன் பின்னணியில் இருக்கிற திட்டமிடலை, அரசியலை இன்னும் பலவற்றை விலாவாரியாக பேசும் என எதிர்பார்க்க வைத்தது. ஆனால், படம் மக்களுக்கு கேன் வாட்டர் போடுகிற இருவருக்கு இடையிலான பிரச்சனையை சுற்றிச் சுழன்று நிறைவுக்கு வருவது ஏமாற்றம்.
படம் பார்த்து முடித்தபின் மனம் நினைத்த விஷயம், ‘வடசென்னை மக்கள் என்றாலே எல்லா விஷயத்துக்கும் அடித்துக் கொள்கிறவர்கள், உணர்ச்சி வசப்பட்டு மனிதர்களைக் கொல்கிறவர்கள், மகிழ்ச்சியான வாழ்க்கை வாழாதவர்கள் என்பதைப் போலவே காண்பிக்கிற வழக்கத்துக்கு யாராவது முற்றுப்புள்ளி வைக்க மாட்டார்களா’ என்பதுதான்.

