‘நல்லதும், கெட்டதும் நிறைந்திருப்பதுதான் உலகம்’ என்பதை உணர்த்தும் படைப்பு.
இளைஞன் சுரேஷும் பிராமணப் பெண் அபிராமியும் காதலிக்கிறார்கள். அந்த ஜோடியின் திருமணப் பேச்சு வார்த்தையின்போது குறுக்கே வருகிற, துஷ்டசக்தியை சுமந்திருக்கும் ஒரு பெண், ‘அபிராமி சாக வேண்டியவள், சீக்கிரமே சாகப் போகிறாள்’ என்று சொல்லி அதிர்ச்சி தருகிறாள்.
அவள் ஏன் அப்படி சொன்னாள் என்பது பற்றி அபிராமியின் அப்பா, அம்மாவிடம் விசாரிக்கும்போது அபிராமி அவர்களுடைய மகளே இல்லை என்பதும், அவளுடைய தந்தை செய்த பாவச் செயலுக்காக ஒரு சக்தி அபிராமியை பழி வாங்கக் காத்திருப்பதும் தெரியவருகிறது.
அபி யாருடைய மகள், அவளுடைய தந்தை செய்த பாவம் என்ன? பழிவாங்கக் காத்திருக்கும் சக்தியிடமிருந்து அபிராமியைக் காப்பாற்ற முடிந்ததா? காதலர்கள் திருமணம் செய்து கொள்ள முடிந்ததா? இப்படியான கேள்விகளுக்குப் பதில்களே மீதிக் கதை.
கதைநாயகன் சுரேஷாக அன்பு மயில்சாமி. மாமாவுடன் சேர்ந்து குடித்துவிட்டு ஜாலியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பவர் காதலில் விழுந்ததும் பரவச உணர்வுக்கு மாறுவதாகட்டும், காதலியை துஷ்ட சக்தியிடமிருந்து காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவதாகட்டும் நடிப்புப் பங்களிப்பில் குறையில்லாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அபிராமியாக வரும் பிருந்தா கிருஷ்ணன் அழகாக இருக்கிறார். காதல் உணர்வை, பய உணர்வை போதுமான அளவில் வெளிப்படுத்துகிறார்.
மனித உயிர்களைப் பலியிட்டு புதையலை அடையத் துடிக்கும் மந்திரவாதியாக வருகிற நிகாரிகாவின் நடிப்பு மிரட்டுகிறது. இன்னொரு மந்திரவாதியாக வருகிற ஜாக்கும் ஓரளவு மிரட்டுகிறார்.
கதாநாயகனின் அப்பாவாக நிழல்கள் ரவி, கதாநாயகியின் வளர்ப்புத் தந்தையாக வருகிற சசிகுமார் சுப்ரமணியன் என மற்றவர்கள் தங்கள் கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப நடித்திருக்க, ஜாவா சுந்தரேசன், மனோபாலா, லொள்ளுசபா சாமிநாதன் உள்ளிட்டோரின் பங்களிப்பு கலகலப்பூட்டுகிறது.
கணேஷ் சந்திரசேகர் இசையில் ‘அவ கண்ணு முழியால’ காதல் பாடல் இதம் தருகிறது, கிளைமாக்ஸ் பாடல் பரபரப்பூட்டுகிறது. பின்னணி இசை ஹாரர் திரில்லர் கதைக்கு சரியாகப் பொருந்துகிறது. ஹாசிஃப் எம் இஸ்மாயில் ஒளிப்பதிவு பரவாயில்லை ரகம்.
ஒரு புதையல், அதை அடையத் துடிக்கும் மந்திரவாதி என ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதில் காதல், காமெடி என கமர்சியல் அம்சங்களை கலந்து அட்டகாசமான அமானுஷ்ய திரில்லர் அனுபவம் தந்திருக்கிறார் இயக்குநர் வேதமணி.

