‘கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை; நஷ்டப்பட்டாலும் ஓகே.தான். ஆனால், வித்தியாசமாக எதையாவது செய்து கொண்டேதான் இருப்பேன்’ என்ற பிடிவாதக்காரர் பார்த்திபனின் மற்றுமொரு அட்டம்ப்ட். மனிதர் இந்த முறை தொட்டிருப்பது ஸ்பேஸ்ஷிப், ஏலியன் என புகுந்து புறப்படுகிற பெரிய சமாச்சாரம்.
பதின் பருவத்திலிருக்கிற பள்ளி மாணவ, மாணவிகள் 13 பேர் பேய்க்கிணறு பார்க்க புறப்படுகிறார்கள். ஆள் நடமாட்டமில்லாத, பொட்டல் காட்டு வழியாக நடந்துபோக வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறார்கள். அப்படி போய்க் கொண்டிருக்கும்போது ஒவ்வொருவராய் காணாமல் போகிறார்கள்.
அதற்கு காரணம் பேயா? பிசாசா? கொள்ளைக் கும்பலா? என்னவாக இருக்கும்? என்று நாம் யோசிக்கும்போது, அந்த பக்கமாக வருகிற விஞ்ஞானி பார்த்திபன் ‘பேய் பிசாசெல்லாம் இல்லை. நடப்பதே வேறு’ என்கிறார். காணாமல் போனவர்களை மீட்கும் முயற்சியிலும் இறங்குகிறார்.
கதையின் 60% இப்படி நகர, மாணவ மாணவிகள் காணாமல் போனதற்கான காரணங்கள், அவர்களை மீட்பதற்கான முயற்சிகள், அதற்கு கிடைத்த பலன் என மிச்ச மீதிக் காட்சிகள் கடந்தோடுகின்றன.
டீனேஜ் பிள்ளைகளாக வருகிற 13 பேரும் பயத்தால் மிரள்வது, பதற்றத்தால் அங்குமிங்கும் ஓடுவது என துறுதுறுப்பும் பரபரப்புமாக இயங்கியிருக்க, ‘கிடா’ படத்தில் வந்த சிறுவன் மட்டும் பரிதாப முகம் காட்டி மனதுக்கு நெருக்கமாகிறான். கிளைமாக்ஸில் தியாகியாகி நெகிழ வைக்கிறான்.
தனது வழக்கமான ஸ்டைலில் குசும்பு குறும்பு வசனங்களை போட்டு உருட்டிக் கொண்டிருக்காமல் வானியல் ஆராய்ச்சியில் ஈடுபடுவது, ஏலியனுடன் தொடர்பு கொள்வது, காணாமல் போன மாணவ மாணவிகளை மீட்க புத்திசாலித்தனமாக செயல்படுவது என கதையின் தேவைக்கேற்ற நடிப்பை அளவாய் அழகாய் தந்திருக்கிறார்.
யோகிபாபு மின்னல் வெட்டுவதுபோல் மிகச்சில காட்சிகளில் வந்து, லேசாக சிரிப்பு மூட்டி கடமையை முடித்துக் கொள்கிறார்.
இமான் இசையில் ஸ்ருதிஹாசன் பாடியுள்ள ‘நைனிகா’ பாடலும், பார்த்திபன் இணைந்துகொள்ள பிக்பாஸ் ஜோவிகா ஆட்டம்போடும் ‘பிப்லி பிப்லி’ பாடலும் உற்சாகமூட்டுகிறது. ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப பங்களிப்புகளில் பட்ஜெட்டுக்கேற்ற எளிமை தெரிகிறது.
உங்கள் வீட்டு டீன்ஸுக்கு பிடிக்கும்படியான கதைக்களம் படத்தின் பலம். கதைக்கான பிரமாண்டம் காட்சிகளில் இல்லாதது பலவீனம்.
எது எப்படியிருந்தாலும் தயக்கமின்றி பாராட்ட வேண்டியது ஒன்றே ஒன்றுதான்… அது கலைத் தாகம் அடங்காத பார்த்திபனின் வித்தியாசமான முயற்சி!
Rating 3 / 5

