இன்னும் ஒரு மணி நேரம் பயணித்தால் ஆந்திராவுக்குள் நுழைந்து விடலாம். அப்படியான தூரத்திலிருக்கிற ஊர் பொதட்டூர் பேட்டை. அங்கு ஒரே விதமாக நான்கு கொலைகள் நடக்கிறது.
அந்த பகுதியின் காவல்துறை உயரதிகாரி லெஷ்மி. அவர், நடப்பது என்ன? ஏன் நடக்கிறது? நடத்துவது யார்? என்பதையெல்லாம் கண்டறிய வேண்டும். அடுத்தடுத்து கொலைகள் நடக்காமல் தடுக்க வேண்டும். அந்த நிலையில் எஸ் ஐ அதியமானை தன் குழுவில் இணைத்துக் கொள்கிறார்.
ஏடாகூடமானவர், வேலையே செய்யாதவர் என்றெல்லாம் பெயரெடுத்திருப்பவர் அதியமான். ஆனாலும் அவர் துப்புதுலக்கி குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் வல்லவர். அந்த அதியமான் எப்படி குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கிறார் என்பதும் நடக்கும் குற்றங்களுக்கான காரணம் என்ன என்பதும் கதையின் மீதி.
உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ; நான் இப்படித்தான் என உடல்மொழியில் வெளிப்படுத்தும் ஒருவித தெனாவட்டாலும், கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் காட்டும் புத்திசாலித்தனத்தாலும், மனிதாபிமானமிக்க மனிதராக வெளிப்படும் தருணத்தாலும் கவனம் பெறுகிறார் சமுத்திரகனி.
ஷிவதா கதைநாயகி என்றாலும் கதைநாயகனின் காதலி அல்லது மனைவி என்ற வட்டத்துக்குள் சிக்கவில்லை. தனது இன்ஸ்பெக்டர் வேலையை கெத்தாக பார்ப்பவர் என உருவாக்கப்பட்ட கேரக்டருக்கு தேவையான அளவில் கம்பீரம் காட்டியிருக்கிறார்.
சைக்கோ கொலைகாரனான வருகிற இரண்டு பேரும், ஆந்திர டி எஸ் பி’யாக வருகிறவரும் கொடூரகுணம் கொண்டவர்களாக மிரட்டியிருக்க, மற்ற நடிகர் நடிகைகளின் பங்களிப்பும், ஒளிப்பதிவும், பின்னணி இசையும் நேர்த்தி.
‘காவல்துறை உங்கள் நண்பன்’ என சொல்லிக் கொண்டாலும், அந்த துறையினர் அதிகார பலமிக்கவர்களுக்காக எதை வேண்டுமானலும் செய்வார்கள், எத்தனை பேரை வேண்டுமானாலும் சுட்டுத் தள்ளுவார்கள் என்பதெல்லாம் தெரிந்த கதைதான். அப்படி தமிழக ஆந்திர எல்லைப் பகுதியில் 1999 காலகட்டத்தில் காவல் துறையினர் நடந்துகொண்ட விதம், அதற்கு பழிவாங்க களமிறங்கியவர்கள் நியாய தர்மம் பார்க்காமல் சைக்கோவாக மாறி கொன்று குவித்த மனிதர்கள் என தடயத்தின் திரைக்கதை முழுக்க பரபரப்புதான்; காட்சிக்கு காட்சி விறுவிறுப்புதான்.
Rating 3 / 5

