இலங்கைத் தமிழர்கள் பற்றிய படம்; இலங்கைத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட படம்; இலங்கைத் தழிழர்கள் பற்றிய படங்களில் இதுவரை யாரும் தொடாத விஷயத்தை எடுத்துக்கொண்டு அதற்கு திரைவடிவம் தந்திருக்கும் படம்.
சர்வாதிகாரிகள் தங்களை எதிர்ப்பவர்களின் அறிவை மழுங்கடிப்பதை முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படுவார்கள்; கல்வியைத் தடுப்பார்கள். இலக்கியங்களை அழிப்பார்கள்.
அந்த வகையில் இலங்கைத் தமிழர்களுக்கெதிராக சிங்களர்கள் செய்த அநியாய அராஜகங்களில் ஒன்று தமிழர்களின் அறிவு வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. அதற்காக இலங்கைத் தமிழர்களின் அறிவுப் பொக்கிஷமான யாழ்ப்பான நூலகத்தை எரித்தது… இதெல்லாம் வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்திருக்கிற கண்ணீரால் எழுதப்பட்ட அத்தியாயங்கள்.
அந்த சம்பவங்களை நினைவூட்டும் விதத்திலான கதை, திரைக்கதையில் பற்றியெறிகிறது இந்த தீப்பந்தம்.
வயதில் முதிர்ந்த சிவம் வீட்டை சில விஷமிகள் கற்களால் தாக்குகிறார்கள். அவரது இருசக்கர வாகனத்துக்கு தீ வைக்கிறார்கள். அவர், அந்த சந்தர்ப்பத்தில் வெகு நாட்களாக தன் வீட்டில் குடியிருக்கும் நான்கு இளைஞர்களை வீட்டை விட்டு வெளியேறச் சொல்கிறார். மறுநாள் அவர் உயிருடன் இல்லை…
அவருக்கு என்ன நடந்தது என்பதை கிளைமாக்ஸில் காட்டுகிற இயக்குநர் ராஜ் சிவராஜ் அதற்கு முன்னதாக,
கலவர காலகட்டத்தில் யாழ்ப்பான தமிழர்களின் நூலகம் கொளுத்தப்படுவது, எரிந்தவை போக மிச்சமான நூல்களை எடுத்து முதியவர் சிவம் ஆவணமாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவது என பரபரப்பான காட்சிகளைப் பரிமாறுகிறார்.
சிவமாக வருகிற தமிழருவி சிவகுமாரன் நமது இலக்கியப் பொக்கிஷங்களை கட்டிக் காப்பாற்றுவதில் காட்டும் ஈடுபாட்டால் கவனம் பெறுகிறார். இளவயது சிவமாக வருகிற ஆகாஷ் தியாகலிங்கம் காதல் தோல்வி, கல்யாணம் என சில காட்சிகளை உயிரோட்டமான நடிப்பால் நிரப்பியிருக்கிறார்.
புகழ் என்ற பெயரில் வருகிற கில்மன் ஒருசில சிக்கல்களைச் சந்தித்து, அடி உதைகளை வாங்கியபின்னரும் சிவத்தின் லட்சியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் காட்டும் உறுதியால மனதில் நிறைகிறார்.
ரவி என்ற பெயரில் சிவம் பாதுகாத்த இலக்கியங்களை ஆவணமாக்கும் முயற்சியில் பங்களிப்பு தருகிறவர், சிவம் வீட்டில் தங்கியிருக்கும் மற்றவர்கள் என அத்தனைப் பேரும் கதைக்களத்தை இயல்பான நடிப்பால் தாங்கியிருக்கிறார்கள். சிவத்தின் நண்பராக வருகிறவர் கிளைமாக்ஸின் நெருக்கத்தில் அச்சரியப்பட வைக்கிறார்.
சிவம் வீட்டில் தங்கியிருக்கும் இளைஞர்கள் நான்கு பேர், சிவம் இறந்தபின் அவருடன் தொடர்பிலிருந்தவர்களின் முடியை சேகரிக்கும் விதமாக நீளும் காட்சிகளின் மூலமாக இலங்கை தமிழர்களின் மூட நம்பிக்கையொன்றை தெரிந்துகொள்ள முடிகிறது; அது புதியதாக இருக்கிறது.
பூவன் மதீசனின் பின்னணி இசை காட்சிகளின் உணர்வை பிரதிபலிக்கும் விதமாக இருப்பதும், கதை சொல்ல வந்த விசயத்திலிருந்து திசை மாறாமல் செல்வதும், இலங்கை தமிழர்கள் பற்றிய படத்தில் இலங்கைத் தமிழர்களே நடித்திருப்பதும், அவர்கள் இயல்பாக இலங்கைத் தமிழை பேசுவதும் படத்தின் பலம்.
ஏகே கமலின் ஒளிப்பதிவு நேர்த்தி.
வரலாறாகிப்போன ஒரு உண்மைச் சம்பவ பின்னணியில், திரில்லர் பாணியில் ராஜ் சிவராஜ், அருண், பூவன் மதீசன் கூட்டணி அமைத்திருக்கும் திரைக்கதையால் தீப்பந்தம் இலங்கைத் தமிழர்கள் பற்றிய படைப்புகளின் வரிசையில் தனித்துவம் பெறுகிறது!

