கிரைம் திரில்லர் சப்ஜெக்டில், ஆன்மிகத்தை லேசாகத் தொட்டுக்கொண்டு சீறிப் பாயும் ‘சீசா.’
மனநல பாதிப்புக்கு ஆளான ஆதவனுடைய வீட்டில் பணிபுரிபவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். சடலத்தை போலீஸ் கைப்பற்றும்போது, ஆதவனும் அவனது மனைவியும் வீட்டிலிருந்து எஸ்கேப் ஆகியிருப்பது தெரிகிறது.
கொலை செய்தது யார்? ஆதவனும் மனைவியும் எங்கே சென்றார்கள்? என்பதை தெரிந்து கொள்ள விசாரணை துவங்குகிறது. அதில் பல அதிர்ச்சியான உண்மைகள் வெளிவருகிறது.
இளம் தொழிலதிபராக, பைபோலார் டிசார்டர் என்ற மனநல பாதிப்புக்கு அளானவராக நிஷாந்த் ரூசோ. எதிரில் இருப்பவர்களிடம் கண்டபடி கோபப்படுவதும், அடிப்பதும், மனதுக்கு பிடித்த பெண்ணை பேச்சால் வசப்படுத்தி கல்யாணம் செய்து கொள்வதும், அகோரி போல் மாறி ஆவேச ஆட்டம் போடுவதும், செய்யாத தப்பை செய்ததாக நினைத்து வருந்துவதுமாக தன் பங்களிப்பை பரபரப்பாக செய்திருக்கிறார்.
மிரட்டலான விசாரணை, சுறுசுறுப்பான செயல்பாடு என காக்கி யூனிஃபார்மில் கச்சிதமாக கடமையைற்றியிருக்கிறார் நட்டி நட்ராஜ்.
நிஷாந்தின் காதல் மனைவியாக பாடினி குமார். காதல், பயம், பதட்டம், ஆக்ரோஷம் என பலவிதமான உணர்வுகளை காட்சிகளின் தேவையுணர்ந்து வெளிப்படுத்தியிருப்பதோடு, பாடல் காட்சியில் கவர்ச்சியாகவும் தோன்றியிருக்கிறார்.
நிஷாந்த் ரூசோவின் நண்பராக வரும் மூர்த்தி தவறு எதுவும் செய்யாமல் நண்பனிடம் அடிவாங்கி, போலீஸிடம் மிதிவாங்கி உடம்பை வருத்திக் கொண்டிருக்க,
சப் இன்ஸ்பெக்டரான ஆதேஷ் பாலாவுக்கு, கொலை வழக்கு விசாரணையில் இன்ஸ்பெக்டருடன் இணைந்து இயங்குகிற வேலை. அதை பொருத்தமான கம்பீரத்துடன் செய்து தன்னை கவனிக்க வைக்கிறார்.
நாயகியின் தம்பியாக வருபவர் ஆன்லைன் சூதாட்ட அடிமையாக வருகிறார்; அவருக்கு நேரும் முடிவின் மூலம் ஆன்லைன் விளையாட்டுக்களிலுள்ள பேராபத்தை உணர முடிகிறது.
போலீஸிடம், காணாமல் போன தன் மகளைக் கண்டுபிடித்து தரச் சொல்லி கலங்கும்போது நெகிழ வைக்கிறார் இயக்குநர் அரவிந்த்ராஜ்.
சரண்குமார் இசையில் ‘இரவுகள் நீளும் இது காமன் ஆட்டம்’ பாடல் கிறக்கமூட்ட, ‘மிருக குணங்கள் ரத்தம் சீறும்’ பாடல் அதிரடியாக கடந்து போகிறது. பின்னணி இசையும், ஒளிப்பதிவும் கதைக்களத்துக்கு கை கோர்த்திருக்கின்றன.
லாஜிக் மீறல்கள் சில இருந்தாலும் அதையெல்லாம் தாண்டி,
கொலையாளி யார், காரணம் என்ன என்ற சஸ்பென்ஸ் கடைசி வரை தொடரும்படி திரைக்கதை அமைத்து கதைக்களத்தை பலப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் குணா சுப்ரமணியன்.

