சீரியல் கில்லர் கதையில் உருவாகியுள்ள கன்னடப் படம்.
தேவிபிரசாத் ஷெட்டி ‘சீதாராம் பெனாய் கேஸ் நம்பர் 18’, ‘கேஸ் ஆஃப் கொன்டனா’ என தான் இயக்கிய வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக இயக்கியுள்ள ‘செகண்ட் கேஸ் ஆப் சீதாராம்.’
மர்மமான முறையில் நடந்த இரட்டைக் கொலைகளால் ஆனேகடா என்ற ஊர் பரபரப்பாகிறது. கொலையாளி யார் என காவல்துறை உயரதிகாரியொருவர் கண்டறிய களமிறங்குகிறார்.
கொலையாளி குறிப்பிட்ட வயதினரை மட்டுமே தேர்ந்தெடுப்பதும் கொடூரமாக காயப்படுத்திக் கொல்வதையும் வைத்து ‘அதை செய்வது இவர்தான்’ என ஒருவரை அடையாளம் காண்கிறார். அத்தோடு கதை முடிந்தது என்று நினைத்தால், இல்லை இனிதான் தொடக்கம் என்பதுபோல் வேறோரு விதமாக திரைக்கதையின் பயணம் துவங்குகிறது.
ஒரு வழியாக அந்த சைக்கோ கொலையாளி கண்டுபிடிக்கப்பட, தெரியவருகிற கொலைகளுக்கான காரணம் அதிர்ச்சியின் உச்சத்துக்கு கொண்டு போகிறது.
மாஸ் ஹீரோக்கள் காவல்துறை உயரதிகாரியாக களம் கண்டால் அவர்கள் காட்டும் கெத்து அலட்டலாகவே இருக்கும். அதைத்தான் ஆடியன்ஸும் விரும்புவார்கள். சில ஹீரோக்கள் அதேவிதமான கேரக்டரில் நடிக்கும்போது அலட்டலை குறைத்துக் கொண்டு துப்பறிகிற செயல்பாடுகளில் அசத்துவார்கள். அந்த வரிசையில் இந்த படத்தின் ஹீரோ விஜய ராகவேந்திரா இயல்பான நடிப்பு மூலமாகவே கதையின் விறுவிறுப்புக்கு தேவையானதை செய்து கவனம் பெறுகிறார்.
செபாஸ்டின் என்ற பெயரில் வருகிற கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே தந்துள்ள நடிப்பு படத்தைத் தாங்கும் தூண்களில் ஒன்றாக இருக்க, விஜயராகவேந்திராவின் சகோதரியாக வருகிற உஷா பண்டாரி தனித்து தெரிகிறார்.
பின்னணி இசையால் கதையோட்டத்திலுள்ள விறுவிறுப்பின் சதவிகிதத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கும் நவனீத் ஷாம், நடக்கும் சைக்கோ கொலைகளுக்கும் வீணைக்கும் தொடர்பிருப்பதால் வீணையிசைக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்.
மிரட்சியான கதைக்களத்திற்கு பொருத்தமான ஒளிப்பதிவைத் தந்திருக்கிறார் ஹேமந்த்.
ப்டத்தின் முன்பாதியில் இருக்கிற பொறுமையைச் சோதிப்பதுபோன்ற ஒருசில காட்சிகளத் தவிர்த்துப் பார்த்தால், சைக்கோ திரில்லர் படங்களை விரும்புகிறவர்களுக்கு திருப்தி கேரண்டி.
Rating 3.5 / 5

