அமானுஷ்யத்தில் துவங்கி, காதலில் பயணித்து, அம்மா மகன் சென்டிமென்டை தொட்டுக்கொண்டு அதிரடியில் முடிகிற படம்.
சாரா தன்னுடன் பணிபுரியும் இளைஞனைக் காதலித்து, திருமணத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். இன்னும் இரண்டு நாட்களில் திருமணம் என்ற நிலையில், சாராவின் பள்ளிப்பருவ நண்பன் அவளைச் சந்தித்து தன்னை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்துகிறான். அவள் மறுக்க, அவன் கோபத்தின் உச்சிக்கு செல்கிறான். வன்முறையாளனாக மாறுகிறான்.
அந்த நண்பன் திடீரென வந்து சாராவிடம் அப்படி நடந்துகொள்வது ஏன், அவனிடமிருந்து சாராவால் தப்பிக்க முடிந்ததா, திட்டமிட்டபடி காதலனுடன் திருமணம் நடந்ததா இல்லையா என்பதெல்லாம் கதையின் மீதி…
சாராவாக சாக்ஷி அகர்வால். அணியும் உடைகள் கவர்ச்சியாக காட்ட, காதல் பொங்கும் தருணங்களில் பிறக்கும் சிரிப்பு அவரது அழகின் சதவிகிதத்தை அதிகரிக்கிறது. பயம், பதட்டம், ஆத்திரம் என உணர்வுகளை அளவாக வெளிப்படுத்தியிருப்பது கேரக்டருக்கு பலம் சேர்க்கிறது.
இடைவேளை வரை காமெடி என்ற பெயரில் என்னவெல்லாமோ செய்துகொண்டிருக்கும் (இந்த படத்தின் இயக்குநர்) செல்லக்குட்டி, சாராவை சந்தித்தபின் சைக்கோ கொலைகாரர்களின் ஜெராக்ஸாக மாறி அட்டகாசம் செய்கிறார். வெறியாட்டத்தில் ரத்தம் தெறிக்கிறது. அதிகப்படியான நடிப்பால் எதையுமே ரசிக்க முடியவில்லை.
சாராவின் காதலனாக விஜய் விஷ்வா. செல்லம் கொஞ்சுதல், சில்மிசத்துக்கான வாய்ப்பை எதிர்பார்த்தல் என சிம்பிளாக முடிகிறது அவரது கடமை.
மிரட்டல் செல்வா அதிரடி வில்லனாகவும் வருகிறார்; அமானுஷ்ய காட்சியிலும் எட்டிப் பார்க்கிறார். இரண்டிலும் மிரட்டலுக்கு குறைவில்லை.
யோகிபாபு, ரோபோசங்கர், தங்கதுரை என பிரபல நகைச்சுவை நடிகர்கள் இருந்தும் சொல்லிக்கொள்ளும்படியான காமெடி இல்லை. வில்லனின் கனிவான அம்மாவாக வந்துபோகிறார் அம்பிகா.
ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளரும் தங்களால் முடிந்த பங்களிப்பை படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றபடி வழங்கியிருக்கிறார்கள்.
சாராவின் கனவில் வருகிற ஒரு சாமியார் அவரையும் அவர் குடும்பத்தையும் கொடூரமாக கொல்கிறார்; சாராவின் திருமண ஏற்பாட்டில் தொடர்ந்து பல தடைகள் உருவாகிறது. அதையெல்லாம் வைத்து படத்தின் இரண்டாம் பாதி பரபரப்பாக விறுவிறுப்பாக பயணிக்கும் என்று பார்த்தால் அப்படியெல்லாம் இல்லாமல் கதையை வேறொரு திசையில் திருப்பியிருக்கும் இயக்குநர், அதில் சுவாரஸ்யத்தைக் கூட்டாமல் தான் மனம்போன போக்கில் நடிப்பதற்கான களமாக மாற்றிக் கொண்டிருப்பது ஏமாற்றம் தருகிறது. அவர் அடக்கி வாசித்திருந்தால் ஓரளவு ஜோரா வந்திருப்பாள் சாரா!
Rating 2.5 / 5

