சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. ஜித்து மாதவன் இயக்குகிறார்.
இந்தக் கூட்டணி குறித்த தகவல்கள் வெளியானது முதலே, ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. இன்று நடைபெற்ற பூஜை நிகழ்வில் படத்தின் நாயகி நஸ்ரியா நசீம், மலையாளத் திரையுலகின் இளம் நட்சத்திரம் நஸ்லென், நடிகர் ஆனந்த்ராஜ், இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
ழகரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜோதிகா, சிறப்பு விருந்தினர்களாக
நடிகர் கார்த்தி, 2D என்டர்டெயின்மென்ட் ராஜசேகர் பாண்டியன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எஸ்.ஆர். பிரகாஷ் மற்றும் எஸ்.ஆர். பிரபு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. படம் குறித்து இயக்குநர் ஜித்து மாதவன் பேசியபோது, “புதிய திரைத்துறை, புதிய ஆரம்பம். அதுவும் சூர்யா சார் போன்ற ஒரு பெரும் நட்சத்திரத்துடன் இணைவது கூடுதல் உற்சாகத்தைத் தருகிறது. புதிதாக ஒன்றை முயற்சிக்கிறோம். நாங்கள் கொடுக்கவிருக்கும் இந்தப் புதுமையை ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
சமீபத்திய வெற்றிகள் மூலம் கவன ஈர்த்த இளம் நடிகர் நஸ்லென் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஜான் விஜய், ஆனந்த் ராஜ் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

