ஆவணப்படத்தை கமர்ஷியல் திரைப்படம் போல் எடுக்க முடியுமா? முடியும் என ஆர் எம் வீ என்றழைக்கப்படுகிற ஆர் எம் வீரப்பனைப் பற்றிய ஆவணப்படத்தை எடுத்துக் காட்டியிருகிறார் இயக்குநர் பினு சுப்ரமணியன்.
ஆர் எம் வீ தனது ‘சத்யா மூவீஸ்’ நிறுவனம் மூலம் எம் ஜி ஆர் நடிப்பில் பல படங்களைத் தயாரித்தவர். அரசியலில் எம் ஜி ஆர் எட்டிய அத்தனை உயரங்களுக்கும் ஏணியாக இருந்தவர். ஜெயலலிதாவின் அரசியல் பயணத்திலும் பங்களிப்பை வழங்கியவர். எம் ஜி ஆர் அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பொறுப்பேற்று அந்த துறை வரலாற்றில் அவரது பணிக்காலத்தை பொற்காலமாக்கிய சாதனையாளர்.
அப்படி தொட்டதெல்லாம் வெற்றி; ஈடுபட்ட துறைகளில் ஆளுமை என ஆர் எம் வீ பற்றி எடுத்துச் சொல்ல ஏராளமான அருமை பெருமைகளை விவரிக்கிறது இந்த ஆவணப் படம்.
இதில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கும் திராவிட இயக்கத்துக்குமான தொடர்பு, தனக்கும் அவருக்குமான பழக்க வழக்கம் என பல நினைவுகளைப் பகிர்கிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மெகா ஹிட் படங்களில் ஒன்று பாட்ஷா. ஆர் எம் வீ’யின் சத்யா மூவிஸ் தயாரித்த அந்த படத்தின் வெற்றி விழாவில் ரஜினிகாந்த் பேசிய வில்லங்கமான பேச்சினால் ஆர் எம் வீ’யின் அமைச்சர் பதவி பறிபோயிருக்கிறது. அந்த வரலாற்றுச் சம்பவம் முதல் ஆர் எம் வீ பற்றி ஏராளமான விஷயங்களை ரஜினிகாந்த் எடுத்துச் சொல்கிறார்.
அவரது அரசியல் வாழ்க்கை, அதில் சந்தித்த சவால்கள், சாதனைகள் என பலவற்றை பத்திரிகையாளர் ரா கண்ணன் புள்ளிவிவரங்களோடு விவரிக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராவதற்கு வாய்ப்பிருந்தும் அதை விட்டுக்கொடுத்தவர் ஆர் எம் வீ என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள முடிகிறது.
இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், சுரேஷ் கிருஷ்ணா, பி.வாசு, நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், பாடலாசிரியர் வைரமுத்து என திரையுலகப் பிரபலங்கள், ஜெகத்ரட்சகன், தமிழிசை செளந்தரராஜன், தமிழச்சி தங்கபாண்டியன், செ.கு.தமிழரசன் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகள் ஆர்.எம்.வி பற்றி சொல்வதையெல்லாம் பார்க்கும்போது அவர் மீதான மதிப்பு உயர்கிறது.
பிரபலங்கள் எடுத்துச் சொல்லும் சம்பவங்களுக்கும் மலரும் நினைவுகளுக்கும் சம்பந்தப்பட்ட புகைப்படங்கள், காட்சிகள் அடங்கிய வீடியோக்கள், திரைப்பட போஸ்டர்கள், திரைப்படத்தின் காட்சித் துண்டுகள் என தேடித்தேடி நேர்த்தியாக தொகுக்கப்பட்டிருப்பதால் வரலாற்றின் பக்கங்களை மகத்துவமான செயல்பாடுகளால் நிரப்பியிருக்கிற ஆர் எம் வீ பற்றிய இந்த ஆவணப்படமும் வரலாறாகிறது!

