துணி நெய்கிற நெசவுத் தொழிலில் திறமையாளராக இருக்கிற இளைஞன் கதிரும் அதே நிறுவனத்தில் பணிபிரியும் வேணியும் காதலிக்கிறார்கள். வேணியை அந்த நிறுவனத்தின் முதலாளி விரும்புகிறார். வேணி கதிரை காதலிப்பதால் அவரது விருப்பத்துக்கு சம்மதம் தெரிவிக்க முடியாமல் போகிறது. ஒரு கட்டத்தில் கதிரும் வேணியும் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
வேணி கர்ப்பமாகிறாள். அந்த மருத்துவச் செலவுக்கு பணமில்லாமல் தவிக்கும் கதிர், தனது முதலாளியிடம் கடன் வாங்குகிறான். அதை திருப்பிக் கொடுக்க முடியாமல் போகிறது.
முதலாளி விரும்பிய பெண்ணை கல்யாணம் செய்து கொண்டு, கர்ப்பமான அவளது மருத்துவச் செலவுக்கு அந்த முதலாளியிடமே கடன் வாங்கி, அதை திருப்பிக் கொடுக்க முடியாத நிலைமை.
இப்படி சூடுபிடிக்கும் கதை, அடுத்தடுத்த காட்சிகளில் வில்லங்கமாகத்தான் பயணிக்கும். அப்போதுதான் பரபரப்பாக இருக்கும்.
ஆனால், கதிர் தன் பணக்கஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு முதலாளியே உதவுவது போல் திரைக்கதை அமைத்து, படத்தை இயக்கியிருக்கிறார் சக்திவேல் நாகப்பன்.
கதிராக (இந்த படத்தின் இயக்குநர்) சக்திவேல் நாகப்பன், வேணியாக ஹெலன். இருவரும் கிராமத்தில் நடக்கும் கதைக்கு பொருத்தமானவர்களாக இருக்கிறார்கள். காதலர்களாக, கணவன் மனைவியாக, உழைத்து வாழ்பவர்களாக, யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காதவர்களாக இயல்பாக நடித்திருக்கிறார்கள்.
கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் சக்திவேல் கலங்கி நிற்க, எல்லாம் கடந்துபோகும் என ஹெலன் தன்னம்பிக்கை கொடுக்கும்போது கை தட்டத் தோன்றுகிறது.
நெசவுத் தொழில் செய்கிற நிறுவனத்தின் முதலாளியாக சித்தா தர்சன், படு பயங்கர வில்லனாக மாறப்போகிறார் என நினைக்க வைத்து உலகமகா நல்லவராக மாறி மனதில் நிற்கிறார். சாப்ளின் பாலு சிறியளவில் முக்கியத்துவமுள்ள கேரக்டரில் வந்து போகிறார். அந்த இருவர் தவிர ஹீரோ, ஹீரோயின், மற்ற கதாபாத்திரங்களில் வருகிற நடிகர், நடிகைகள் எல்லோருமே புதுமுகங்கள். தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்கி நகர்கிறார்கள்.
நிர்வாகத் தயாரிப்பாளர் டாக்டர் மூதுரை பொய்யாமொழி தேவைக்கேற்ப செலவு செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து, காட்சிகள் எளிமையாகவும் கதைக்கு போதுமானதாகவும் உருவாக காரணமாக இருந்திருக்கிறார்.
காதலர்களுக்கு எதிர்ப்பு இல்லை; யாரை கொடூரமானவராக நினைக்கிறோமோ அவர் நல்லவராகிறார்; குடி போதை, வெட்டுக்குத்து, ஆபாச ஆட்டம் பாட்டம் என படத்தில் வில்லங்க விவகாரங்கள் இல்லவே இல்லை. கதாநாயகனுக்கு பணக் கஷ்டம் வருகிறது. அதுவும் சுலபமாக சரியாகிவிடுகிறது.
‘ஏ வான்முகிலே’, ‘வாடாமல்லி வாடாம’, ‘கண்மணி நீதாண்டி’ என அணிவகுக்கும் பாடல்களை ரசிக்கும்படியான இசையில் தந்திருக்கும் மணி கிருஷ்ணன் பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை.
செட் போடாமல் நிஜ நெசவுத் தொழிற்கூடத்தில் காட்சிகளைப் படமாக்கியிருப்பது உயிரோட்டமாக இருக்கிறது. குமாரபாளையமும் அதன் சுற்று வட்டார கிராமங்களையும் மண்மணம் மாறாமல் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வெற்றி.
இயக்குநரே கதாநாயகன்; அவரே தயாரிப்பாளர். நினைத்ததை செய்ய தடையில்லை. அப்புறமென்ன, விருப்பம்போல் செயல்பட்டிருக்கிறார். அந்த செயல்களில் தப்பும் தவறுமாக எதுவுமில்லை. சமூகத்தைக் கெடுக்கும் நோக்கமில்லை. காட்சிக்கு காட்சி பாஸிடிவிடிக்கு பஞ்சமில்லை. அதனாலேயே படத்திலுள்ள குறைகளைப் பொருட்படுத்தாமல் இயக்குநரைப் பாராட்டத் தோன்றுகிறது.
Rating 3 / 5


