அசுரன் கடவுளான கதை.
இந்து மதத்தினரிடம் விநாயகர் யார்? என்று கேட்டால் சிவபெருமானின் மகன் என்பார்கள். முருகன் யார்? என்று கேட்டால் சிவனுடைய இளைய மகன் என்பார்கள். லஷ்மி யார் என்றால் விஷ்ணுவின் மனைவி என்றும், இராமர் யார் என்றால் சீதையின் கணவர் என்றும் சொல்வார்கள். இப்படி பல கடவுள்களைப் பற்றி தெரிந்து வைத்திருப்பவர்களுக்கு நவகிரகங்களில் இணைந்திருக்கிற ராகு, கேது பற்றி கேட்டால் பரிகார தெய்வங்கள் என்றளவில் மட்டுமே தெரிந்து வைத்திருப்பார்கள்.
இந்த படம் ராகு _ கேது எப்படி உருவானார்கள், அவர்கள் எப்படி கிரகங்களுடன் இணைந்தார்கள் என்கிற சிலிர்ப்பான வரலாற்றை எடுத்துச் சொல்கிறது.
அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைகிறார்கள். அதன் விளைவாக கிடைத்த அமிர்தத்தை தேவர்களுக்கு, மோகினி வடிவில் வந்த மகாவிஷ்ணு வழங்குகிறார். அசுரர்களில் ஒருவனான சுபர்பானு தேவர்களுடன் கலந்து அமிர்தம் பெற்று பருகுகிறான். தவறான வழியில் வந்து அமிர்தம் பருகியதால் அவனது உடலிலிருந்து தலை துண்டிக்கப்படுகிறது. அமிர்தம் பருகியதால் தலையிலிருந்தும் உடலிலிருந்தும் உயிர் பிரியாமலிருக்கிறது.
சுபர்பானு தான் வணங்கும் துர்காதேவியிடம் தனக்கு நேர்ந்தவற்றை சொல்ல, துர்காதேவி தன்னுடனிருக்கும் நாகத்தின் தலையை சுபர்பானுவின் உடலிலும், நாகத்தின் உடலை சுபர்பானுவின் தலையிலும் பொருத்தி,
நாகத்தின் தலையை பொருத்திக் கொண்டிருக்கும் சுபர்பானுவுக்கு கேது என்றும், நாகத்தின் உடலுடன் இருக்கும் சுபர்பானுவுக்கு ராகு என்றும் பெயர் சூட்டுகிறார். ராகுவும் கேதுவும் சிவனை வழிபட, அவர் ராகுவையும் கேதுவையும் ஏற்கனவே இருக்கும் ஏழு கிரகங்களுடன் இணைத்து அருளாசி வழங்குகிறார். ராகுவும் கேதுவும் அன்றிலிருந்து இன்று வரை பரிகார தெய்வங்களாக இருந்து தன்னை நாடிவரும் பக்தர்களை தோஷத்திலிருந்து மீட்டு அருள் பாலித்து வருகின்றனர்.
இந்த புராணக் கதைக்கு கே பி அறிவானந்தம் திரைக்கதை, வசனம் எழுத, இயக்கியிருக்கிறார் டி பாலசுந்தரம்.
சுபர்பானுவாக வருகிற பாலசுந்தரம் வசனங்களை கம்பீரமாக பேசி மனதில் நிறைகிறார்.
சிவனாக வருகிற சமுத்திரகனியை பார்த்தால் வணங்கத் தோன்றுகிறது. அந்தளவு கெட்டப் அசத்துகிறது.
கஸ்தூரி துர்காதேவியாக தனது பங்களிப்பை அளவாக செய்து முடிக்க, மகாவிஷ்ணுவாக அழகிய தோற்றத்தில் தலை காட்டுகிறார் விக்னேஷ்.
சுபர்பானுவின் காதலியாக வருகிற சந்தியாஸ்ரீயின் லட்சணமாக முகவெட்டு ஈர்க்கிறது.
மோகினி, இந்திரன், சூரியன், சந்திரன், நாரதர் என மற்றவர்கள் எண்ணிக்கை அளவில் திரையில் நிரம்பியிருக்கிறார்கள்.
ஜோதிடர் ஒருவர் ராகு – கேது உருவான கதையை, மகாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்த தருணத்தை எடுத்துச் சொல்வதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்க,
அந்த ஜோதிடரிடம் நாட்டை ஆளும் மன்னரின் குழந்தை ரகசியமாக வளர்வது, அந்த குழந்தை வளர்ந்து சிறுவனான பருவத்தில் நாகசர்ப்ப தோஷம் தொற்றுவது, அதன் பிடியிலிருந்து அந்த சிறுவன் மீண்டு வருவது என நீளும் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்க்கின்றன.
சதா சுதர்சனம் இசையில் பாடல்கள் இதம். பின்னணி இசையால் கதையோட்டத்திற்கு உயிரோட்டம் தர முயற்சித்திருக்கிறார் பரணிதரன். மோகன் பிரசாந்தின் ஒளிப்பதிவு ஒகே ரகம்.
மேக்கிங் என்று பார்த்தால் எளிமையான மேடை நாடகத்தின் தரத்திற்கும் குறைந்ததாக இருந்தாலும், நடிகர் நடிகைகள் தேர்வு பொருத்தமாக இல்லாதது போலிருந்தாலும் இந்த தலைமுறைக்கு இந்து மதத்தினரின் பரிகார தெய்வங்களான ராகு, கேது பற்றி எடுத்துச் சொல்ல முன்வந்ததற்காக படக்குழுவை பாராட்டலாம்.

